Published : 08 May 2022 08:51 AM
Last Updated : 08 May 2022 08:51 AM

நிச்சயமாக ஜெயலலிதா ஆட்சியை வழங்குவோம்: திருச்செந்தூரில் சசிகலா உறுதி

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த சசிகலா.

தூத்துக்குடி: “வருங்காலத்தில் நிச்சயமாக ஜெயலலிதா ஆட்சிபோல் எந்த குறையும் இல்லாத ஆட்சியை வழங்குவோம்” என திருச்செந்தூரில் சசிகலா தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் நேற்று தரிசனம் செய்தார். விஸ்வரூப தரிசனத்துக்குப் பின்பு 5 அடி உயர வெண்கல வேல் ஒன்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக எங்களுடைய கட்சிதான். தொண்டர்களும் எங்களுடன்தான் உள்ளனர். தொண்டர்களில் இருந்துதான் தலைவர்களை உருவாக்குகிறோம். விரைவில் அரசியல் பயணம் மேற்கொள்வேன்.

வருங்காலத்தில் நிச்சயமாக ஜெயலலிதாவின் ஆட்சியைப்போன்ற எந்த குறையும் இல்லாத ஆட்சியை வழங்குவோம். ஜெயலலிதா‌ ஆட்சியில் இருந்தபோது எங்களுடைய கட்சிக்காரர்கள் கூட போலீஸ் நிலையத்தில் எதுவும் கேட்க முடியாது. அந்த அளவுக்கு கட்டுப்பாடாக வைத்திருந்தார். தற்போது திமுக ஆட்சியில் கரைவேட்டி கட்டியவர்கள்தான் போலீஸ் நிலையத்தில் அதிகமாக இருக்கின்றனர் என மக்களே கூறுகின்றனர். இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

ரூ.10 ஆயிரம் கேட்கின்றனர்

மாதந்தோறும் பணம் தரவேண்டும் என திமுகவினர் மிரட்டுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மாதம் ரூ.10 ஆயிரம் கொடுங்கள் என திமுகவினர் கேட்பதாக அங்கு உள்ள வியாபாரிகள் என்னிடம் நேரடியாக கூறினர். இது முதல்வருக்கு தெரியுமா என்பது தெரியவில்லை என்றார். பின்னர், அதிமுக கொடி கட்டிய காரில் மதுரை வந்த அவர் மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x