Published : 08 May 2022 04:15 AM
Last Updated : 08 May 2022 04:15 AM

10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும்

சென்னை

10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும்பணி ஜூன் 1 முதல் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை சுமார் 9.93 லட்சம் மாணவர்கள் எழுதி வருகின்றனர். இம்மாதம் 30-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. இதைத் தொடர்ந்து,மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ல் தொடங்கும் எனதகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள், திருத்துதல் மையங்களுக்கு மே 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து ஜூன் 1 முதல் 9-ம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெறவுள்ளன. இதில் 55 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து தேர்வு முடிவுகள் ஜூன் 17-ல் வெளியிடப்படும்.

இதேபோல், பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதவுள்ள 8.9 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்துதல் மையங்களுக்கு ஜூன் 4-ம் தேதிக்குள் அனுப்பப்படும். அதன் பின்பு ஜூன் 9 முதல் 17-ம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெறும். இதில் அரியர் பாடத்தேர்வு விடைத்தாள்கள் ஜூன் 10, 11-ம் தேதிகளில் திருத்தி முடிக்கப்படும். இந்தப் பணிகளில் 48 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வு முடிவுகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூலை 7-ல் வெளியிடப்படும்.

6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் விடைத்தாள்கள் பள்ளி அளவிலேயே திருத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் மே 30-ம்தேதிக்குள் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x