வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழக துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

பாம்பனில் சனிக்கிழமை மாலை ஏற்றப்பட்ட ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.
பாம்பனில் சனிக்கிழமை மாலை ஏற்றப்பட்ட ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.
Updated on
1 min read

ராமேசுவரம்: வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதால் தமிழகத்திலுள்ள துறைமுகங்களில் சனிக்கிழமை மாலை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி சனிக்கிழமை தெற்கு அந்தமான் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. மேலும், இது ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி புயலாக வலுபெறும். இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து செவ்வாய்கிழமை மாலை வட ஆந்திரா - ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மாலை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பாம்பன், தூத்துக்குடி, குளச்சல், நாகப்பட்டிணம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி, சென்னை, எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இதனால் மீனவர்கள் அந்தமான் மற்றும் வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் கரை திரும்புமாறும் மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in