Published : 07 May 2022 02:29 PM
Last Updated : 07 May 2022 02:29 PM

விசாரணைக் கைதி விக்னேஷ் மரண வழக்கு: 2 காவலர்கள் கைது; சிபிசிஐடி நடவடிக்கை

உயிரிழந்த கைதி விக்னேஷ்.

சென்னை: விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக 2 காவலர்களை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் கடந்த 19 ஆம் தேதி தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் விசாரணைக் கைதி விக்னேஷின் தலை, கண், புருவம் என்று மொத்தம் 13 இடங்களில் காயம் உள்ளதாக உடற்கூராய்வு அறிக்கை மூலம் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து நடத்திட சிபிசிஐடிக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று (மே 6) உத்தரவிட்டார். இதன்படி சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து நேற்றே விசாரணையைத் தொடங்கினர். மேலும், அதன் நீட்சியாக நேற்றைய தினமே 9 காவலர்களிடம் நேரில் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் காவலர்கள் 2 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் நேற்று பின்னிரவு கைது செய்தனர். தலைமைச் செயலக காலனி நிலைய எழுத்தர் முனாஃப் மற்றும் காவலர் பவுன்ராஜ் ஆகியோரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x