Published : 07 May 2022 11:44 AM
Last Updated : 07 May 2022 11:44 AM

'மக்களுக்குப் பயன்தராத, துன்பங்கள் நிறைந்த திமுகவின் ஓராண்டு ஆட்சி' - ஓபிஎஸ்

ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்

சென்னை: மக்களுக்குப் பயன்தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி திமுக-வின் ஓராண்டு ஆட்சி என்பதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டார்கள் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "2021ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலில், திமுக-வின் பொய்யான, போலியான, நிறைவேற்ற முடியாத, சாத்தியமற்ற வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்ததன் விளைவாக தமிழகத்தில் திமுக ஆட்சி துரதிர்ஷ்டவசமாக அமைந்துவிட்டது. இதன் காரணமாக, கடந்த ஓராண்டில் பொதுமக்கள் இன்பங்களை மறந்து துன்பங்களை மட்டுமே அனுபவித்து வருகின்றனர். மக்கள் எந்த வாக்குறுதிகளை நம்பி திமுக-விற்கு வாக்களித்தார்களோ அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

உதாரணமாக, திமுக-வின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று நீட் தேர்வு ரத்து. நீட் தேர்வை ரத்து செய்ய கழக அரசு அமைந்ததும் முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்று திமுக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஓரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மேடைக்கு மேடை தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தலைவர்களால் பேசப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டாகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு முடிந்துள்ள நிலையில் இதற்கான சட்டமுன்வடிவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் ஒப்புதல் அளித்தப் பிறகுதான் மேற்படி சட்டமுன்வடிவு சட்டமாகும் என்ற நிலையில்,

ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்று முதல்வருக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பது போல் மக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த ஓராண்டில் பலர் நீட் தேர்வு காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். நீட் தேர்விற்கு மூலக் காரணமாக இருந்துவிட்டு, இன்று நீட் தேர்வை ரத்து செய்யப் போகிறோம் என்று கூறுவது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் செயல். அடுத்த முக்கியமான வாக்குறுதி கல்விக் கடன் ரத்து. "30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்" என்று திமுக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஓராண்டாகியும் இது குறித்து திமுக அரசு வாய் திறக்கவில்லை. திமுக-வின் இந்த வாக்குறுதியை நம்பி வாக்களித்த மக்கள் மேலும் கடனாளிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். பொதுவாக, கல்விக் கடன் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் வங்கிகளில் தான் வழங்கப்படுகிறது. இதற்கான அதிகாரம் மத்திய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கி ஆகியவற்றிடம்தான் இருக்கிறதே தவிர மாநில அரசிடம் இல்லை.

இதையும் மீறி கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றால், மாணவ, மாணவியர் பெற்ற கடனை மாநில அரசு தனது நிதியிலிருந்து ஒரே தவணையில் வட்டியுடன் தொடர்புடைய வங்கிகளுக்கு செலுத்த வேண்டும். இது சாத்தியமற்ற ஒன்று. சாத்தியமற்ற ஒன்று என்று நன்கு தெரிந்திருந்தும் மக்களை ஏமாற்ற வேண்டுமென்பதற்காக, எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதி. மற்றொரு முக்கியமான வாக்குறுதி நகைக் கடன் ரத்து. திமுக அரசு அமைந்ததும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகைகள் ரத்து செய்யப்படும் என திமுக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது ஒருபுறம் என்றால், "நகைக் கடன் வாங்காதவர்கள் எல்லாம் வாங்கிக் கொள்ளுங்கள், ஸ்டாலின்தான் ஆட்சிக்கு வரப் போகிறார், எல்லா கடனையும் தள்ளுபடி செய்துவிடுவார்" என்ற பிரச்சாரம் வேறு மறுபுறம். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து கிட்டத்தட்ட 75 விழுக்காடு பயனாளிகளின் நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என அரசு அறிவித்தது.

திமுக-வின் இந்த வாக்குறுதியை நம்பி கிட்டத்தட்ட 35 இலட்சம் பேர் கடனாளிகளாக ஆகியதுதான் மிச்சம். மக்களை கவர்ந்த மற்றொரு வாக்குறுதி மாதம் ஒரு முறை மின் கட்டணம். இதன்மூலம் 1,000 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரையில் பயனடைவர் என்று திமுக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்த மின்சாரத் துறை அமைச்சர் "மின்சார உட்கட்டமைப்புகளை பலப்படுத்திய பின் தமிழகத்தில் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும்" என்று கூறியிருக்கிறார். மின்சார உட்கட்டமைப்புகளை பலப்படுத்துவது என்பது ஒரு தொடர் செயல். இதற்கு முடிவே இல்லை. எனவே, ‘இது’ முடிந்து ‘அது’ என்பது ‘முடியாது’ என்பதற்குச் சமம்.

மகளிர் எதிர்பார்த்த முக்கியமான வாக்குறுதி மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை. பெரும்பாலானோர் இந்த வாக்குறுதியை நம்பி திமுக-விற்கு வாக்களித்தார்கள். தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை என்று குறிப்பிட்விட்டு, நிதிநிலை அறிக்கையில் இது ஏழ்மையானவர்களுக்கான திட்டம் என்று திமுக அரசு கூறுகிறது. இதன்மூலம், மொத்த மகளிரில் பத்து விழுக்காட்டிற்கும் குறைவான மகளிருக்கு அளித்துவிட்டு இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்று கூறிக் கொள்ளப் போகிறது திமுக இது ஒருவிதமான ஏமாற்று வேலை. இதேபோன்று, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்ற வாக்குறுதியை திமுக அறிவித்தது. எரிவாயுவை வீடுகள்தோறும் வழங்கும் பணியை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

மத்திய அரசு நிறுவனங்கள் மேற்கொள்ளும் பணியில் மாநில அரசு மானியம் வழங்குவது என்பது சாத்தியமற்ற செயல். அவ்வாறு கொடுக்க வேண்டுமென்றால், தமிழகத்தில் எரிபொருள் இணைப்பு வைத்துள்ளோர் அனைவருக்குமான மானியத்தை முன்கூட்டியே மாநில அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். அதை அந்த நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளுமா என்பதும் சந்தேகம்தான். இந்த வாக்குறுதியும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அளிக்கப்பட்ட ஒன்று.

இதேபோன்று, மக்கள் நம்பி வாக்களித்த முக்கிய வாக்குறுதிகளான நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம் பருப்பு, முதியோர் ஓய்வு ஊதியம் 1,500 ரூபாய், ஏழு பேர் விடுதலை, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்புதல், புதிதாக இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்குதல், 100 நாட்கள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தி வழங்குதல் போன்றவை திமுக அரசால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மக்களை ஏமாற்றலாம் என்று திமுக அரசு நினைக்கிறது. ஆனால், இனி மக்கள் ஏமாறத் தயாராக இல்லை.

வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்படவில்லை, நேர்மையான, சுதந்திரமான, நியாயமான, நீதி தவறாத ஆட்சி நடக்கிறதா என்றால் அதுவும் இல்லை. மக்கள் அன்றாடம் வேதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக கவுன்சிலர்களால் மக்கள் படும் துன்பங்கள் சொல்லி மாளாது. தினந்தோறும் பத்திரிகைகளை திறந்தாலே பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு பாதுகாப்பின்மை, அரசு நிர்வாகத்தில் திமுக-வினரின் அராஜகங்கள், காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை, கொலைகள், கொள்ளைகள், காவல் துறைக் கட்டுப்பாட்டில் உயிரிழப்புகள் ஏற்படுதல், பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் தொடர் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுதல், சாதிக் கலவரங்கள், மாணவர்கள் ஆசிரியரைத் தாக்குவது என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

காவல் துறையினரைப் பார்த்து ரவுடிகள் நடுங்கிக் கொண்டிருந்த நிலை மாறி, ரவுடிகளையும், திமுக-வினரையும் பார்த்து காவல் துறையினர் அஞ்சுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் அச்சத்தின் உச்சத்தில் உள்ளார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. சட்டம்-ஒழுங்கு தான் இப்படி என்றால், மின்சாரத் துறை இதைவிட மோசமாக இருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே மின்வெட்டு என்பது அடிக்கடி ஏற்படுகிறது என மக்கள் தெரிவிக்கிறார்கள். எரிசக்தித் துறை அமைச்சரிடம் மின் வெட்டு குறித்துக் கேட்டால், நிலக்கரி பற்றாக்குறை என்கிறார், ரயில் பெட்டிகள் பற்றாக்குறை என்கிறார், மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது, திமுக-வின் முந்தைய ஆட்சி தான் மக்கள் நினைவில் உடனடியாக வருகிறது. இந்த நிலைமை நீடித்தால், தமிழ்நாடு இருளில் மூழ்கிவிடுமோ, தமிழ்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற கவலை மக்களிடையே வந்துவிட்டது.

திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது, கட்டுமானப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டே இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படமாட்டாது என்ற வாக்குறுதியையும் மீறி, சொத்து வரியையும், குடிநீர் வரியையும் உயர்த்தி எரிகிற நெருப்பில் எண்ணெயை திமுக ஊற்றியிருக்கிறது.

இது போதாது என்று ஜெயலலிதா ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களிடம் அமோக வரவேற்பினை பெற்ற திட்டமான அம்மா உணவகங்களை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை திமுக அரசு எடுத்துள்ளது. மகளிருக்கு நன்மை பயக்கக்கூடிய ஜெயலலிதா இரு சக்கர வாகனத் திட்டம், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், அம்மா மினி கிளினிக்குகள் ஆகியவற்றிற்கு மூடு விழா நடத்தியுள்ளது திமுக அரசு. அதிமுக ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்ட 2,500 ரூபாய் பொங்கல் பரிசு நிறுத்தப்பட்டு வெறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டும் அளிக்கப்பட்டது. சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட இந்த பரிசுத் தொகுப்பினால் எந்தப் பிரிவு மக்களும் பயனடையவில்லை. பயனடைந்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மொத்தத்தில் மக்கள் பணம் 1,200 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டதுதான் மிச்சம். எதிர்க்கட்சித் தவைராக இருந்தபோது தேசியக் கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்தவர் ஸ்டாலின்.

ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் மாநிலக் கல்விக் கொள்கைக்கு இப்போதுதான் குழு போடப்பட்டு இருக்கிறது. இது திமுக மென்மையான போக்கை கடைபிடிக்கிறதோ, இரட்டை வேடம் போடுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ‘மகரிஷி சரக் சபத்’ குறித்து தேசிய மருத்துவ ஆணையம் ஏற்கெனவே அறிவுரை வழங்கிய நிலையில், அதுகுறித்து திமுக அரசு தெளிவுபடுத்தாததுதான் மருத்துவ மாணவர்கள் மேற்படி முறையில் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டதற்குக் காரணம் என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதிலும் இரட்டை வேடமோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. இதேபோன்று, எதிர்க்கட்சியாக இருந்தபோது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அடிக்கடி குரல் கொடுத்த திமுக, ஏழு பேர் விடுதலை குறித்து குரல் கொடுத்த திமுக, பூரண மதுவிலக்கு என்று குரல் கொடுத்த திமுக, இவை குறித்து பேசாமல் வாய்மூடி மவுனியாக இருப்பது கண்டு மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள். ‘காவல் துறை கட்டுப்பாட்டில் ஏற்படும் தொடர் மர்ம மரணங்கள்’ ‘தருமபுர ஆதீன விவகாரம்’, ‘டாஸ்மாக் பார் விவகாரம்’ உள்ளிட்ட பலவற்றில் திமுக அரசின் அணுகுமுறையைக் கண்டு மக்கள் முகம் சுளிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நீட் தேர்வு ரத்து பிரச்சினையில் மேதகு ஆளுநரை எதிர்க்கின்ற திமுக அரசு, வரிப் பகிர்வு விஷயத்தில் மத்திய அரசை எதிர்க்கின்ற திமுக அரசு, முல்லைப் பெரியாறு விஷயத்தில் பல்வேறு இடையூறுகளை தமிழகத்திற்கு அளித்துக் கொண்டிருக்கின்ற கேரள அரசை எதிர்க்கவோ, மேகதாது அணைப் பிரச்சினையில் கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்க்கவோ திமுக தயக்கம் காட்டுவது வியப்பாக இருக்கிறது. ஒருவேளை இதுதான் திராவிட மாடல் போலும்! மொத்தத்தில், மக்களுக்குப் பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி திமுக-வின் ஓராண்டு ஆட்சி என்பதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டார்கள். "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்" என்பதற்கேற்ப அதிமுக ஆட்சி மீண்டும் மலரும்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x