Published : 07 May 2022 10:31 AM
Last Updated : 07 May 2022 10:31 AM

29 சி பேருந்தில் முதல்வர் ஸ்டாலின் பயணம்; சட்டப்பேரவையில் பெருமித விளக்கம்

29 சி பேருந்தில் முதல்வர் ஸ்டாலின். | படங்கள்: எல்.சீனிவாசன்.

சென்னை: திமுக அரசு அமைந்து ஓராண்டு ஆன நிலையில் சட்டப்பேரவையில் சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், துளி போன்ற காலத்தில் கடல் போல் சாதனை நிகழ்த்தியுள்ளோம் என்றார்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 2021, மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இன்று (மே 7, 2022) தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டாகிறது. இதனையொட்டி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, "தமிழக மக்களுக்காக கடந்த ஓராண்டில் உண்மையாக உழைத்துள்ளேன். அந்த நம்பிக்கையில் இன்று அவையில் பேசுகிறேன். என்னை முதல்வராக்கிய மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழமை உறவுகளாக இருக்கும் தோழமைக் கட்சித் தலைவர்களுக்கு நன்றி. அவர்களால் தான் நான் தலை நிமிர்ந்து இருக்கிறேன்.

இன்று காலை நான் ராதாகிருஷ்ணன் சாலையில் (29 சி) அரசுப் பேருந்தில் ஏறிப் பயணித்தேன். 29 சி பேருந்தில் தான் சிறுவயதில் பள்ளிக்குச் சென்று வந்தேன். அதனால் அந்தப் பயணம் எனக்கு மகிழ்ச்சியளித்தது. பேருந்திலிருந்த மகளிரிடம் ஓராண்டு கால திமுக ஆட்சியைப் பற்றிக் கேட்டேன். ஆட்சி நடக்கும் முறை திருப்தியளிக்கிறது என்று மகளிர் தெரிவித்தனர். என்னைப் பார்த்ததில் இன்னும் மகிழ்ச்சியென்றனர். இலவசப் பயணத்தால் தாங்கள் லாபமடைவதாகக் கூறினார்கள். இதற்கு சான்றும் உள்ளது. இந்தத் திட்டம் குறித்து சென்னையில் மூன்று வழித்தடங்களில் பயணிக்கும் மக்கள் சிலரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இத்திட்டத்தால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,

பட்டியலினப் பெண்கள் பயன் பெற்றுள்ளனர். அதுவும் குறிப்பாக பட்டியலினப் பெண்கள் அதிகமாகப் பயன் பெற்றுள்ளனர். இந்தச் சலுகை மூலமாக மாதந்தோறும் குறைந்தது ரூ.900 வரை மிச்சமாவதாக பெண்கள் பலர் கூறியுள்ளனர். இதுதான் இந்த அரசின் சாதனை. அன்றாடச் செலவுக்கு பணம் இல்லாது இருந்த பெண்கள் சேமிக்கக் கூடியவர்களாக மாறியுள்ளனர். ஒரே கையெழுத்து மூலம் கோடிக்கணக்கான மகளிர் வாழ்வில் ஒளியேற்றியது தான் திராவிட மாடல் ஆட்சி. இது மட்டுமல்ல இன்னும் பல சாதனைகளை நமது ஆட்சி செய்துள்ளது. ஓராண்டு காலத்தில் கோடிக்கணக்கான மக்கள் பலன் பெற்றுள்ளனர்" என்றார்.

முன்னதாக இன்று காலை கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசிர்வாதம் பெற்றார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தலைமைச் செயலகத்தில் ஓராண்டு கால சாதனையை விளக்கும் மலர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x