கட்டாய மத மாற்றத்தை தடுக்கக் கோரி வழக்கு: 4 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கட்டாய மத மாற்றத்தை தடுக்கக் கோரி வழக்கு: 4 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on

சென்னை: பள்ளிகளில் கட்டாய மத மாற்றத்தைத் தடுக்கும் வகையில், உரிய விதிகளை வகுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சில தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டாய மத மாற்றம் நடப்பதாக குற்றம் சாட்டியும், அதைத் தடுக்க உரிய விதிகளை வகுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் பி.ஜெகந்நாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நடந்த சம்பவங்களைத் தவிர, வேறு எந்த கல்வி நிறுவனத்திலும் கட்டாய மத மாற்றச் சம்பவங்கள் நடந்ததாக எந்தப் புகாரும் இல்லை. அவ்வாறு புகார்கள் வந்தால், அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இதே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ரகசிய விசாரணையில், தமிழகத்தில் 5 இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் கட்டாய மத மாற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறி, கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in