Published : 06 May 2022 01:49 PM
Last Updated : 06 May 2022 01:49 PM

'கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம்' | தடுப்பு விதிகள் வகுக்கக் கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை: கல்வி நிறுவனங்களில் மதமாற்றங்கள் செய்யப்படுவதைத் தடுப்பது தொடர்பாக விதிகளை வகுக்கக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. ஜெகன்நாத் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் நடக்கிறது. எனவே கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும். இதனைத் தடுக்க உரிய விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, அரசுத்தரப்பில், "திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சம்பவங்களைத் தவிர வேறு எந்த கல்வி நிறுவனத்திலும் கட்டாய மதமாற்ற சம்பவங்கள் நடந்ததாக எந்தப் புகாரும் இல்லை. புகார்கள் வந்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே இந்த வழக்கை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆனந்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், தனியார் தொலைக்காட்சி நடத்திய ரகசிய விசாரணையில் தமிழகத்தில் 5 இடங்களில் கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, மனு விசாரணைக்கு உகந்ததுதான் எனக் கூறி, விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x