Last Updated : 06 May, 2022 01:31 PM

 

Published : 06 May 2022 01:31 PM
Last Updated : 06 May 2022 01:31 PM

சாத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து: 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் காயம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 21 மாணவிகள் காயமடைந்தனர். இவர்களில் 6 பேர் பாடுகாயமடைந்ததால் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவேங்கடம் மற்றும் கரிசல்குளம் பகுதியிலிருந்து சுமார் 60 மாணவிகள் வந்த தனியார் கல்லூரி பேருந்தினை திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த கணபதி (63) என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் கல்லூரி பேருந்து சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது பேருந்தின் 'மெயின் ஆக்சில்' கட் ஆனது. இதில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிகிறது.

இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவிகள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனை, மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த 6 மாணவிகள் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்துக்கு வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கிய வாகனத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா நேரில் வந்து ஆய்வு செய்தார். கல்லூரி பேருந்து மரத்தில் மோதி மாணவிகள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x