புதுச்சேரி | சட்டவிரோத பேனர்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி | சட்டவிரோத பேனர்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: புதுச்சேரி நகராட்சியில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், புதுச்சேரி,கரிக்கலாம்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜெகனாதன் தாக்கல் செய்த மனுவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த மாதம் 24-ம் தேதி புதுச்சேரிக்கு வந்தபோது ஆயிரக்கணக்கான சட்டவிரோதமாக பேனர்கள் நகரம் முழுவதும் வைக்கப்பட்டன. அந்த பேனர்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்த வாரம், தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பேனர்கள் அகற்றப்பட்டதாக புதுச்சேரி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பேனர்களை அகற்றியதற்கான செலவுகளை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பேனர்கள் அகற்றப்படவில்லை என ஜெகனாதன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், புதுச்சேரியில் சட்ட விரோதமாக 2,500 பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒப்பந்த முறையில் ஒப்பந்ததாரர்களால் வைக்கப்பட்ட பேனர்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. அரசியல்வாதிகளால் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்படவில்லை எனக் கூறி, புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்யப்பட்டன.

இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்ட விரோதமாக பேனர் வைப்பது உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது. எனவே அவற்றை அகற்ற வேண்டும் எனவும், பேனர்களை அகற்றியது தொடர்பாக இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in