Published : 06 May 2022 06:07 AM
Last Updated : 06 May 2022 06:07 AM

நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி பாரதியார் பல்கலை.யில் குடியேறும் போராட்டம்

கோவை: உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி, பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 1980-ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழக அரசின் சார்பில், விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு, கோவை மருதமலை சாலையில் பாரதியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும், குடும்பத்தில் ஒருவருக்கு பல்கலைக்கழக வளாகத்தில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்த அப்போதைய கணக்கின்படி, ஒரு சென்ட்டுக்கு ரூ.1,900 தொகை நிர்ணயிக்கப்பட்டது. இதைஎதிர்த்து விவசாயிகள் நீதிமன்றம் சென்றனர். ஒரு சென்ட் நிலத்துக்கு ரூ.3 ஆயிரத்து 300 என்ற அடிப்படையில் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், கடந்த 40 ஆண்டு களுக்கும் மேலாக நிலம் கொடுத்தவிவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. நிலம் அளித்த 900 நபர்களில் பலர்உயிரிழந்து விட்டனர். இழப்பீட்டுத் தொகையை வழங்க விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் அல்லதுநிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள், பாரதியார் பல்கலைக்கழகத்தில் குடியேறும் போராட்டத்தை நேற்று நடத்தினர். கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். அவருடன் இணைந்து விவசாயிகள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் அவர்களை தடுத்தனர். தொடர்ந்து, பல்கலைக்கழகம் முன்பு சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, “அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, வரும் 15-ம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறும் போது, ‘‘தற்காலிகமாக போராட் டத்தை ஒத்தி வைக்கிறோம். தீர்வு காணப்படவில்லை என்றால் ஆடு, மாடுகளுடன் பாரதியார் பல் கலைக்கழகத்துக்குள் குடியேறும் போராட்டத்தை மீண்டும் நடத்து வோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x