Published : 06 May 2022 06:00 AM
Last Updated : 06 May 2022 06:00 AM

ரத்தக்குழாய் நுண்துளை அறுவை சிகிச்சை முடிந்து ஆம்புலன்ஸில் பள்ளிக்கு வந்து பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி

திருப்பூர்: ரத்தக்குழாய் நுண்துளை அறுவை சிகிச்சை முடிந்து, ஆம்புலன்ஸில் வந்து திருப்பூரை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி நேற்று பிளஸ் 2 தேர்வு எழுதினார்.

திருப்பூர் குப்பாண்டம்பாளை யத்தை சேர்ந்த அய்யனார், கீதா தம்பதியின் மகள் ரிதன்யா. இவர்,கணபதிபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி ரிதன்யாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. திருப்பூர் - பல்லடம் சாலையிலுள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்பு நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மாணவி நலமுடன்மருத்துவமனையில் இருந்தார்.

இதனிடையே, பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கிய சூழலில், தேர்வு எழுத வேண்டுமென பெற்றோர் மற்றும் மருத்துவரிடம் ரிதன்யா கூறியுள்ளார். மாணவியின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு, மருத்துவரின் அறிவுரைப்படி ஆம்புலன்ஸ் மூலமாக சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கணபதிபாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கு செவிலியர்கள் உதவியுடன் சென்று ரிதன்யா தேர்வு எழுதினார். உதவியாளர் யாருமின்றி தேர்வு எழுதியதைக் கண்டு சக மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x