Published : 06 May 2022 07:12 AM
Last Updated : 06 May 2022 07:12 AM

விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் எஸ்.புதூரைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: எஸ்.புதூர் சாத்தனூர் சாலையில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இக்கடையை எஸ்.புதூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்துக்கு மாற்ற முயற்சி நடைபெறுகிறது. அதற்காக விவசாய நிலத்தில் மண், ஜல்லிக் கற்களை கொட்டி மேடாக்கி வருகின்றனர்.

எங்கள் கிராமம் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளது. நன்செய் நிலத்தில் கட்டிடம் கட்டுவதால் வருங்காலத்தில் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படும்.

விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் 22.2.2022-ல் உத்தரவிட்டுள்ளது. விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை திறந்தால் விவசாயக் கூலி வேலை செய்யும் பெண்களுக்கு இடையூறு ஏற்படும். காலி பாட்டில்களை அங்கேயே போட்டுச் செல்வதற்கு வாய்ப்புள்ளதால் பாதிப்பு ஏற்படும். எனவே விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.ராஜா, பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் எஸ்.பிரபா, விஸ்வநாதன் ஆகியோர் வாதிட்டனர். பின்னர், விவசாய நிலத்தில் மதுக்கடைகள் திறக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x