

கேளம்பாக்கம்: சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் வணிகர் தினத்தையொட்டி தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் 39-வது வணிகர் தின விழா, சங்கத் தலைவர் சந்திரன் ஜெயபால் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி பங்கேற்றார். மகாஜன சங்கம் சார்பில் செங்கோல் பரிசளிக்கப்பட்டது.
பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியின்போது தமிழகத்தில் வணிகர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தமிழகத்தில் வால்மார்ட் நிறுவனம் வராமல் தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா. சிறு வணிகர்கள் எளிமையாக வரிகளை செலுத்தும் திட்டங்களை அதிமுக அரசுதான் செயல்படுத்தியது. இரவு 10 மணிக்கு மேல் கடைகள் திறந்திருக்க உத்தரவிட்டதும் அதிமுக அரசுதான்.
திமுகவும், காங்கிரஸ் கட்சியும் அந்நிய முதலீடுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. வணிகர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் லூலூ மார்ட் நிறுவனம் தமிழகத்தில் நுழைவதை தடுத்து நிறுத்த முடியும். இவ்வாறு அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.