Published : 29 May 2016 11:50 AM
Last Updated : 29 May 2016 11:50 AM
வெப்பச் சலனம் காரணமாக வடதமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று (மே 29) சூறைக்காற்றுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:
வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வடதமிழ்நாட்டில் நாளை (இன்று) ஒரு சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும். இன்று (நேற்று) திருத்தணி, வேலூர், சென்னை நுங்கம்பாக்கம், விமான நிலையம், ஆகிய இடங்களில் 40 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பம் பதிவானது. காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 90 மில்லி மீட்டர் மழை பதிவானது
அரவக்குறிச்சியில் 70 மில்லி மீட்டர், தேவகோட்டை, இளையான்குடி, சிவகங்கை, ஏற்காடு ஆகிய இடங்களில் தலா 60 மில்லி மீட்டர், புதுச்சேரி, வானூர், மூலனூரில் தலா 50 மில்லி மீட்டர், மானாமதுரை, தாளவாடி, மைலம், வேடசந்தூர், கொடுமுடி, திருப்பத்தூர், கோத்தகிரி, பரமத்திவேலூர் ஆகிய இடங்களில் தலா 40 மில்லி மீட்டர், மேலூர், அருப்புக்கோட்டை, சேலம், சாத்தனூர் அணை, திண்டிவனம், அஞ்சட்டி, பஞ்சட்டி ஆகிய இடங்களில் தலா 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT