சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டருக்கு ஓராண்டு சிறை: போக்சோ நீதிமன்றம்

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டருக்கு ஓராண்டு சிறை: போக்சோ நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டருக்கு ஓராண்டுசிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் டியூசன் மாஸ்டர் லோகநாதன் என்பவரிடம் டியூசன் படித்து வந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு, டியூசன் படிக்க வந்த சிறுவனுக்கு லோகநாதன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் தகவல் கூறியுள்ளார். இதையடுத்து சிறுவனின் தந்தை செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டியூசன் மாஸ்டர் லோகநாதன் மீது புகார் கொடுத்தார்.

இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், புகார்தாரர் குறிப்பிட்டிருந்தது உண்மையென தெரியவந்தது. இதையடுத்து டியூசன் மாஸ்டர் லோகநாதன் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், லோகநாதன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், லோகநாதனுக்கு 1 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

இந்த வழக்கை விரைவாக விசாரித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளில் உரிய கவனம் செலுத்தி, குற்றவாளிக்கு தண்டனைப் பெற்று தந்த, செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்களுக்கு சென்னைப் பெருநகர காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in