Last Updated : 04 May, 2022 06:10 AM

 

Published : 04 May 2022 06:10 AM
Last Updated : 04 May 2022 06:10 AM

சாத்தான்குளம் தந்தை, மகனை கொலை செய்ததைபோல என்னையும் கொலை செய்ய திட்டம்: நீதிபதிக்கு காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பரபரப்பு கடிதம்

காவல் ஆய்வாளர் தர்

மதுரை: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகனைக் கொலை செய்ததுபோல் தன்னையும் கொலை செய்ய இதே வழக்கில் கைதானவர்கள் திட்டம் தீட்டி வருவதாக வழக்கின் முதல் எதிரியான காவல் ஆய்வாளர் தர் விசாரணை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ்.இவரது மகன் பென்னிக்ஸ். செல்போன் கடை நடத்தினார். 2020-ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கின்போது, கடையை குறித்த நேரத்தில் அடைக்கவில்லை எனக் கூறி பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று கொடூரமாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் தர், காவல்உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேசன் உட்பட 10 பேரை சிபிஐ கைது செய்தது. அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 10-வது நபர் பால்துரை உடல்நிலை பாதித்து இறந்தார். தற்போது 9 பேர் சிறையில் உள்ளனர். இவ்வழக்கை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் விசாரிக்கிறது.

இந்நிலையில் முதல் எதிரியான காவல் ஆய்வாளர் தர்,விசாரணை நீதிபதிக்கு அனுப்பிஉள்ள கடிதத்தில் குறிப்பிட்டுஉள்ளதாவது: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை எதிரிகள் 2 முதல் 9 பேர் சேர்ந்து கொடூரமாகத் தாக்கியும், பொய் வழக்குப் பதிவு செய்தும் சிறையில் தந்திரமாக அடைத்ததால் இருவரும் இறந்தனர்.

இது தொடர்பாக எதிரிகளிடம், ஏன் இருவரையும் சாகும் அளவுக்கு அடித்துக் கொலை செய்து, என்னையும் வழக்கில் சிக்க வைத்தீர்கள் எனக் கேட்டதால் தகராறு ஏற்பட்டது.

இதனால் நான் மட்டும் தனியாகவும், மற்ற 8 பேரும் ஒரு பிரிவாகவும் சிறையில் இருந்து வருகிறோம். அந்த 8 பேரும் என்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் மோசமாக பேசியும், தாக்கவும் வருகின்றனர். நான் நீதிமன்றத்தில் உண்மையை சொல்லிவிடுவேன் எனக் கருதி என்னை கொலை செய்ய திட்டம் தீட்டி வருகின்றனர்.

இதனால் எனக்கு ஜாமீன் வழங்கவும் அல்லது கோவை சிறைக்குமாற்றவும் அல்லது தனிப் பிரிவுக்கு மாற்றவும் சிறைத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் பலன் இல்லை. இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து தருக்கு சிறையில் கூடுதல் பாதுகாப்பு வழங்கவும், 24 மணி நேரமும் கண்காணிக்கவும் சிறைத் துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x