Last Updated : 03 May, 2022 06:20 AM

 

Published : 03 May 2022 06:20 AM
Last Updated : 03 May 2022 06:20 AM

அரசுப் பள்ளி அருகே உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கக்கூடாது; 25% இலவச சேர்க்கை குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்: விதிகளை மாற்றியமைக்க சமூக ஆர்வலர்கள், பெற்றோர் கோரிக்கை

சென்னை: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் பயன்பெறும் வகையில் விதிகளை அரசு மாற்றியமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பெற்றோர் கோரியுள்ளனர்.

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம்.

தமிழகத்தில் 2013-ல் அமலான ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 6.8 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இதற்கு கல்விக் கட்டணமாக அரசு சார்பில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.300 கோடி வரை நிதி ஒதுக்கப்படுகிறது. இதற்கிடையே வரும் கல்வியாண்டுக்கான (2022-23) இலவச சேர்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தொடங்கியது. இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேலான பெற்றோர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த திட்டத்தில் குளறுபடிகள் நடைபெறுவதால் தகுதியானவர்கள் பலன் அடைவதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஒய்வுபெற்ற ஆசிரியர் கு.பால்ராஜ் கூறியதாவது:

இந்த திட்டத்தின்கீழ் ஏழைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்குதான் 25 சதவீத இடஒதுக்கீடு தரப்பட வேண்டும். ஆனால், நடுத்தர வர்த்தகத்தை சேர்ந்த பலர் வருமானத்தை குறைவாக காட்டி சேருவதால் தகுதியான ஏழை குழந்தைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகின்றன.

அவ்வாறு சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு சில பள்ளிகளில் சமமான கற்றல் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இதனால் அந்த குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இதற்கு சட்டத்தை அரசு முறையாக அமல்படுத்தாததும், வெளிப்படைத்தன்மை இல்லாததும் காரணமாகும். பெரும்பாலான தனியார் பள்ளிகள் விண்ணப்பித்த பின் பெற்றோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.

இதுதொடர்பாக புகார்கள் தந்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த குறைபாடுகளை களைந்து தகுதியானவர்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைகளை அரசு மாற்ற வேண்டும். மேலும், அனைத்து பள்ளிகளில் உள்ள இடங்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோலம், மாநிலத்தில் கணிசமான சிபிஎஸ்இ பள்ளிகள் இலவச சேர்க்கை நடத்த ஒத்துழைப்பு தருவதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இதுதொடர்பாக தனியார் பள்ளி முதல்வர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:

மத்திய அரசு சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரையே இலவச சேர்க்கை நடத்த வேண்டும். ஆனால், தமிழக அரசு எல்கேஜி முதலே சேர்க்கையை மேற்கொள்கிறது. இதனால் எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில்லை. அதேபோல், பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகள் மார்ச் மாதமே சேர்க்கையை முடித்து விடுகின்றன. மேலும், கல்விக் கட்டணத்தை மட்டும் ஓராண்டு வரை தாமதித்து வழங்குகின்றன. இதுதவிர புத்தகம், சீருடை, பேருந்து போன்ற இதர தேவைகளுக்கான கட்டணங்களை கொடுப்பதில்லை. அதனால் சிபிஎஸ்இ பள்ளிகள் இலவச சேர்க்கைக்கு தயக்கம் காட்டுகின்றன. இவ்வாறு தெரிவித்தார்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, “ஆர்டிஇ விதிகளின்படி அரசுப்பள்ளி அருகே உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது. ஆனால், விதிகளுக்கு முரணாக தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

கரோனா சூழலுக்குபின் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்துள்ளது. அவற்றை தக்கவைக்க வேண்டியது அரசின் கடமையாகும். மேலும், ஆர்டிஇ திட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு வழங்கும் நிதியை கொண்டு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தரத்தை உயர்த்தலாம்“என்றார்.

ஆர்டிஇ விதிகளின்படி அரசுப்பள்ளி அருகே உள்ள தனியார் பள்ளிகளில் 25 % இடஒதுக்கீடில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது. ஆனால், விதிகளுக்கு முரணாக சேர்க்கப்படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x