Published : 03 May 2022 06:08 AM
Last Updated : 03 May 2022 06:08 AM

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஸ்டெக்சரில் சென்று மருத்துவக் காப்பீடு அட்டை பெற்ற மூதாட்டி

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காப்பீட்டு திட்ட அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் அறைக்கு மூதாட்டி பேபி ஸ்டெக்சரில் அழைத்து வரப்பட்டார்.

கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு, முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்காக மூதாட்டி ஸ்டெக்சரில் அழைத்து வரப்பட்டார்.

கடலூர் கே.என்.பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பேபி ( 60). இவர் திருமணமாகாமல் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவர் வீட்டில் வழுக்கி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதைப்பார்த்த அக்கம்பக் கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு எக்ஸ்ரே எடுத்து ஆபரேஷன் செய்ய வேண்டியுள்ளதால் அங்கிருந்த மருத்துவர்கள் முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கான அட்டை வாங்கி வரும்படி கூறி உள்ளனர். இதனையடுத்து அவரது உறவினர்கள் மூதாட்டி பேபியை நேற்று மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து காப்பீடு திட்ட அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் அறைக்கு ஸ்டெக்சரில் கொண்டு செல்லப்பட்டார்.

இந்த அறைக்கு கொண்டு செல்லப்பட்ட 10 நிமிடத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டு அவருக்கு காப்பீட்டு திட்டத்திற்கான அட்டையை வழங்கினர். பின்னர் அவர் மீண்டும் ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை பெறுவதற்காக மூதாட்டி ஸ்டெக்சரில் அழைத்து வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x