

திருவண்ணாமலை: சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் மாசில்லா மாவட்டமாக உருவாக்குவதற்கான முதல் பணிக்குழுக் கூட்டம் தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்துப் பேசும்போது, “தி.மலை மாவட்டத்தில் உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் நெகிழித்தாள் உறை, தெர்மக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள் மற்றும் தேநீர் குவளைகள், உணவு அருந்தும் மேசை மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக், நீர் நிரப்பப்படும் பிளாஸ்டிக் பைகள், பொட்டலங்கள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் தூக்கு பைகள், பிளாஸ்டிக் குவளைகள் ஆகிய பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
தி.மலை மாவட்டத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைக்கும் நிறுவனங்கள் மீது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணைப்படி, நகராட்சி ஆணையர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும். பயன்பாடு மற்றும் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் சேமிப்பு, வழங்கல், போக்குவரத்து, விற்பனை மற்றும் விநியோகம் செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும்.
வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் உள்ளிட்ட பெரிய வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மற்றும் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு மற்றும் விநியோகம் செய்தால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும். மளிகை கடைகள் மற்றும் மருந்து கடைகள் உள்ளிட்ட பெரிய வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மற்றும் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் விநியோகம் செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும். சிறு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மற்றும் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு மற்றும் விநியோகம் செய்தால் ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும்.
அபராதம் விதிக்கப்பட்ட பிறகும் பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.