Last Updated : 02 May, 2022 08:42 PM

 

Published : 02 May 2022 08:42 PM
Last Updated : 02 May 2022 08:42 PM

புதுச்சேரி முதல்வருடன் போனிகபூர் திடீர் சந்திப்பு: விரைவில் புதிய படப்பிடிப்புக்கு வாய்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் சட்டப்பேரவை வளாகத்தில் சந்தித்து உரையாடினார். விரைவில் புதிய படப்பிடிப்புக்கு வாய்ப்புள்ளதாக திரைப்பட வட்டாரங்கள் குறிப்பிட்டன.

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர் மரியாதை நிமித்தமாக முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவை வளாகத்தில் இன்று மாலை சந்தித்தார். இச்சந்திப்பில் சிறிது நேரம் இருவரும் உரையாடினர். இச்சந்திப்பின்போது பேரவை துணைத்தலைவர் ராஜவேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இச்சந்திப்பின்போது "திரைப்படப் படப்பிடிப்புக்கு ஏற்ற நகரம் புதுச்சேரி. திரைப்படம் படப்பிடிப்பு நடத்த விருப்பமுள்ளது. ஹோட்டல்கள் உட்பட தேவையான கட்டமைப்பு தேவை" என்று முதல்வரிடம் போனிகபூர் குறிப்பிட்டதாக சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னர் செய்தியாளர்களிடம் போனிகபூர் கூறுகையில், "பிரெஞ்சு கலாசாரத்துடன் உள்ள புதுச்சேரியை மிகவும் பிடிக்கும். அடிக்கடி பல பாலிவுட் ஹீரோக்கள் புதுச்சேரி வருகின்றனர். படப்பிடிப்புகளும் நடக்கின்றன. அதனால், நானும் புதுச்சேரி வந்தேன். தற்போது மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து முக்கிய விஷயங்கள் பற்றி உரையாடினேன்" என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து விரைவில் புதுச்சேரியில் பாலிவுட் படப்பிடிப்புகள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் திரைப்பட வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x