Published : 04 May 2016 09:26 AM
Last Updated : 04 May 2016 09:26 AM
நமது கலாச்சாரத்தை அழிப்பதற்கு திமுக, அதிமுக துணைபோவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டினார்.
திருச்செங்கோடு சட்டப் பேரவை தொகுதி கொமதேக வேட்பாளர் நதி ராஜவேலுவை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன், திருச்செங்கோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் தலைவர் களுடன் பிரச்சாரத்துக்கு வந்த போது தொகுதி மக்களின் பிரச்சினைகளை பேசினார்களா. கொங்கு மக்களின் ஓட்டுக்களை மட்டும் பெற்றுக்கொண்டு இப் பகுதியின் பிரச்சினைகளை தீர்க்காமல் மக்களை ஏமாற்று கின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக ஒரு முறை கூட இந்தப்பகுதி மக்களை சந்திக்காதவர்களுக்கு வாக்களித்தால் இனி நாம் பிரச்சாரத்துக்கு கூட வர வேண்டியது இல்லை. திமுக பொருளாளர் ஸ்டாலின் எவ்வளவு தைரியத்துடன் திருச்செங்கோடு வந்து வாக்கு கேட்கிறார். திருச்செங்கோடு பெண்களை கேவலமாக எழுதிய பெருமாள் முருகனை ஆதரித்து பேசியதோடு திருச்செங்கோட்டில் சாதி மதவெறியர்கள் இருக்கிறார் என அறிக்கைவிட்டவர்.
இந்த மாவட்ட செயலாளர் தொழில் துறை அமைச்சராக இருப்பவர். இந்த மாவட்டத்தில் ஏதாவது தொழிற்சாலை கொண்டு வந்து இருக்கிறாரா. 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு கொண்டு வந்தோம் என சொல்கிறீர்களே, ரூ. 1 கோடி முதலீடாவது இந்த பகுதிக்கு வந்தது உண்டா. திமுக ஆட்சியில் ரூ. 1 லட்சம் கோடியாக இருந்த கடன், கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
நமது கலாச்சாரம்தான் நமது பொருளாதாரம். கலாச்சாரம் கெட்டால் பொருளாதாரம் அழிந்து விடும். நமது கலாச்சாரத்தை அழிப்பதற்கு திமுக, அதிமுக கட்சிகள் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.
இந்த தேர்தலில் ஒரு கோடியே 40 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களது ஒரு வாக்கு கூட திமுக, அதிமுகவுக்கு விழாது. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT