தமிழக அரசு இலங்கை தமிழருக்கு உதவுவதை தேமுதிக வரவேற்கிறது: பிரேமலதா விஜயகாந்த்

கரூரில் நடைபெற்ற மே தின கூட்டத்தில் பேசுகிறார் பிரேமலதா.
கரூரில் நடைபெற்ற மே தின கூட்டத்தில் பேசுகிறார் பிரேமலதா.
Updated on
1 min read

கரூர்: இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு உதவுவதை தேமுதிக வரவேற்கிறது என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நேற்று நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். பின்னர் கரூர் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா கரூரில் இன்று (மே 2ம் தேதி) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் அதிகமான ஊழல் நடப்பதால் தொடர்ந்து நலிவுற்றுக் கொண்டே வருகிறது. தேவைக்கு அதிகமான அதிகாரிகள் பணியமர்த்தியதில் அவர்களுக்கு ஊதியம் வழங்கியே நலிவடைந்து வருகிறது. ஐஏஎஸ் அதிகாரி நியமித்து சீராய்வு செய்யவேண்டும். போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் லஞ்சம் அதிகமாக இருக்கிறது.

திமுக ஆடசிக்கு வந்தாலே அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலுக்கு வந்துவிடுகிறது. இதற்கு காரணங்களைக் கூறி சப்பைக்கட்டு கட்டாமல் மின்வெட்டை சமாளிப்பதுதான் சவால். தமிழகத்தில் 30 சவீத பேருந்துகள் காலாவதியானவை. இவற்றை மாற்றி தரமான பேருந்துகளை இயக்கவேண்டும். திமுக தான் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. திராவிட மாடல். சிறந்த ஆட்சி என முதல்வரே கூறிக்கொள்கிறார். சிறந்த ஆட்சி என மக்கள் கூறி பாராட்டவேண்டும்.

கரூர் மே தின கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் பிரேமலதா
கரூர் மே தின கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் பிரேமலதா

நீட்டை ஒழிப்போம் என்றனர். ஒழித்தார்களா?. மாறாக, இதனை வைத்து அரசியல் பண்ணுகின்றனர். துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர், அரசு இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது. இதனால் மக்கள், மாணவர்கள், பெற்றோர் இடையே குழப்பம்தான் ஏற்படுகிறது. மாணவர்களிடையே மோதல், ஆசிரியரை தாக்குதல் என கலாச்சார சீரழிவு ஏற்பட்டுள்ளது. மே தினத்திற்கு முதல் நாள் ரூ.252 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. மாணவர்களின் சீரழிவுக்கு மதுவும் முக்கிய காரணமாகும். போடாத சாலைக்கு ரூ.3 கோடி ஊழல் நடந்துள்ளது. இதற்கு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தால் போதுமா? பணத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதிகார மமதையால் இவை நடக்கின்றன. மக்கள் தேர்தல் நேரத்தில் அனைத்தையும் மறந்துவிட்டு காசுக்கு ஓட்டு போட்டுவிடுகின்றனர். மக்கள் மாறினால் எல்லாம் மாறும். தமிழக அரசு இலங்கை தமிழருக்கு உதவுவதை தேமுதிக வரவேற்கிறது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய இடத்தை அடையும்'' என்றார்.

பிரேமலதா பேட்டியளித்தபோது தேமுதிக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in