Published : 01 May 2022 07:29 AM
Last Updated : 01 May 2022 07:29 AM

மருத்துவக் கல்லூரி கல்விக் கட்டணத்தில் பாகுபாடு என புகார்: சிதம்பரத்தில் 10-வது நாளாக மாணவர் போராட்டம்

கல்விக் கட்டண குளறுபடியைக் கண்டித்து, கண்களைக் கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.

கடலூர்:பிற அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தையே தங்களுக்கும் வசூலிக்கக் கோரி, சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று 10-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசுடைமையாக்கப்பட்ட பின்பு, அதன் கட்டுப்பாட்டில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது. ஆனாலும், அங்கு தொடர்ந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, எதிர்க்கட்சியாக இருந்த திமுக, ‘ஆட்சி மாறியதும் கட்டணத்தை மாற்றுவோம்’ என மாணவர்களிடம் உறுதியளித்தது.

இதற்கிடையே, நடப்பு கல்வி ஆண்டில் இக்கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து 2,3,4-ம் ஆண்டுகளில் பயின்று வரும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

10-வது நாளாக நேற்று 2,3,4-ம் ஆண்டு மாணவர்கள் கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், 2,3,4-ம் ஆண்டு மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனாலும், மாணவர்கள் கலைந்து செல்லாமல் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தை தொடர்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x