Published : 01 May 2022 04:10 AM
Last Updated : 01 May 2022 04:10 AM

ராசிபுரம் அருகே கிராமத்தில் இறந்த தாய்க்கு கோயில் கட்டி வழிபடும் மகன்கள்

நாமக்கல்

ராசிபுரம் அருகே இறந்த தாயின் நினைவாக கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியதுடன் நாள்தோறும் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி வரும் மகன்களின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.

ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை நாவல்பட்டி காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (82). இவரது மனைவி அலமேலு (72). இவர்களுக்கு முருகேசன், பச்சமுத்து என இரு மகன்கள், மாரியம்மா, ராஜாமணி, ஜெயக்கொடி என 3 மகள்கள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அலமேலு உயிரிழந்தார்.

இதில் மனமுடைந்த முருகேசன், பச்சமுத்து இருவரும் மன அமைதிக்காக கோயில்களுக்கு செல்லத் தொடங்கினர். இந்நிலையில் தாய்க்கு கோயில் கட்ட முடிவு செய்து, அவர்களது விவசாயத் தோட்டத்தின் ஒரு பகுதியில் கருங்கற்களால் கோயில் கட்டினர்.

கருவறையில் இரண்டே முக்கால் அடி உயரத்தில் அவரது தாயாரின் முக வடிவில் சிலை அமைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். பின்னர், நாள்தோறும் தாயின் சிலைக்கு பால், இளநீர் அபிஷேகம் உள்பட பல்வேறு அபிஷேகம் செய்து குடும்பத்துடன் வழிபட்டு வருகின்றனர்.

பெற்ற தாய்க்கு கோயில் கட்டி சகோதரர்கள் வழிபாடு நடத்தி வருவது கிராம மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x