கஸ்தூரி ராஜா வாங்கிய கடனுக்காக நடிகர் ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

கஸ்தூரி ராஜா வாங்கிய கடனுக்காக நடிகர் ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
Updated on
1 min read

திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜா வாங்கிய கடனுக்காக, நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக சினிமா ஃபைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சினிமா ஃபைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, தன்னிடம் நடிகர் தனுஷின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான கஸ்தூரி ராஜாரூ.65 லட்சம் கடன் வாங்கியிருந்ததாகவும், கடனைத் திருப்பித் தரவில்லை என்றால் நடிகர் ரஜினிகாந்த் திருப்பித் தருவார் என்று கஸ்தூரி ராஜா கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அதில், தனது பெயரை தவறாகப் பயன்படுத்திய கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ரஜினிக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தனது பெயரை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்தான் வழக்கு தொடர வேண்டும். இதில் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடிசெய்ததுடன், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையில், போத்ரா உயிரிழந்தார்.

பின்னர், நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, போத்ராவின் மகன் ககன்போத்ரா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

கஸ்தூரி ராஜா சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.காஜாமொய்தீன் கிஸ்தி ஆஜராகி, தனக்காக ரஜினிபணம் கொடுப்பார் என்று எழுதப்பட்ட கடிதம் போலியானது என்றும், எவ்வித பணமும் போத்ராவுக்கு தர வேண்டியதில்லை என்றும் வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மனுதாரர் இந்த வழக்கை நடத்துவதில் ஆர்வம் காட்டாமல், காலதாமதம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இருக்கிறார். தொடர்ந்து 3 முறைக்கு மேல்அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை” என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in