Published : 24 Jun 2014 08:54 AM
Last Updated : 24 Jun 2014 08:54 AM

செம்மர கடத்தல் சரவணனுக்கு 48 மணி நேரம் போலீஸ் காவல்: முக்கிய புள்ளிகள் கலக்கம்

காட்பாடி வீட்டில் ரூ.4 கோடி பணம் பதுக்கிய வழக்கில் செம்மரக் கடத்தல் முக்கியப் புள்ளி சரவணனிடம் 48 மணி நேரம் காவலில் விசாரணை நடத்த போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

காட்பாடி தாராபடவேடு பகுதியில் வாடகைக்கு குடியிருந்த மோகனாம்பாள் என்ற கரகாட்ட கலைஞரின் வீட்டில் கடந்த மாதம் 25-ம் தேதி போலீஸார் திடீர் சோதனை நடத்தி, ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம், 73 பவுன் நகை, வங்கி முதலீட்டு ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மோகனாம்பாளும் அவரது அக்கா நிர்மலாவும் சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் காவலில் சரவணன்:

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் தலைமறைவாக இருந்த சரவணன் கடந்த 19-ம் தேதி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் காட்பாடி நீதிபதி சுஜாதா முன்னிலையில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கும்படி போலீஸார் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, ‘‘48 மணி நேரம் விசாரணை நடத்திவிட்டு புதன்கிழமை பிற்பகல் நீதிமன்றத்தில் சரவணனை ஆஜர்படுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ரகசிய இடத்தில் வைத்து சரவணனிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை செம்மரக் கடத்தல் தொழிலில் திமுக ஒன்றியச் செயலாளர் பாபுவிற்கு அடுத்தபடியாக சரவணன் முக்கிய நபர். இவர் மூலம் எங்கெல்லாம் செம்மரம் வெட்டிக் கடத்தப்பட்டது, யாருக்கெல்லாம் இவர் செம்மரங்களை கடத்தியுள்ளார், இவரிடம் பணம் கொடுத்த அரசியல் புள்ளிகள், ஜமுனாமரத்தூரில் ஆட்களை ஏற்பாடு செய்யும் நபர் போன்ற அனைத்து தகவல்களையும் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த தகவல்களை சரவணன் வெளிப்படுத்தும்பட்சத்தில் முக்கிய அரசியல் புள்ளிகள் பலர் கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x