Published : 30 Apr 2022 01:11 PM
Last Updated : 30 Apr 2022 01:11 PM

தமிழகத்தில் 6 முதல் 12 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி எப்போது? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: 6 முதல் 12 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகள் வந்தவுடன், அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை மடுவங்கரையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் ரூ.51.94 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சூரியசக்தி உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம் மற்றும் பயிற்சி மைய அறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறுகையில், "சென்னை 2.O திட்டத்தின் கீழ் 22 பள்ளிகளில் ஹை-டெக் லேப் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத் திடல்களை பராமரிப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு மாதங்களில், மாணவர்களுக்கு விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுத் திடல்கள் மேம்படுத்தப்படும்.

6 முதல் 12 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகள் வந்தவுடன், அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போடப்படும். இதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்துவது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அனுமதி வந்தவுடன் தமிழகத்தில் இலவசமாக பூஸ்டர் டோஸ் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x