செங்கை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு 34 தணிக்கை அலுவலர்கள் நியமனம்

செங்கை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு 34 தணிக்கை அலுவலர்கள் நியமனம்
Updated on
1 min read

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்களை தணிக்கை செய்ய 34 தணிக்கை அலுவலர்கள் நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 34 அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நெல் கொள்முதல் மையங்களில் ஒரு மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.80 வரை கமிஷன் பெறப்படுவதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடுகள் தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து இந்த நேரடி நெல் கொள்முதல் மையங்களை தணிக்கை செய்ய வருவாய் கோட்ட அலுவலர் சீ.சரஸ்வதி, மாவட்ட வழங்கல் அலுவலர் எம்.சீதா உள்ளிட்ட 34 தணிக்கை அலுவலர்களை நியமித்து மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் உத்தரவிட்டார்.

இந்த தணிக்கை அலுவலர்கள் நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்குச் சென்று இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் விவரம், தரம், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் இருப்பு விவரம், கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் தொடர்பான விவரம் ஆகியவை குறித்து தணிக்கை செய்ய உள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை விவசாய சங்கங்களும், விவசாயிகளும் வரவேற்றுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in