Published : 30 Apr 2022 06:34 AM
Last Updated : 30 Apr 2022 06:34 AM

நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சி பஜனை மடத்தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் காமராஜ்(47), விவசாயி. இவரது மனைவி சுதா(40). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த ஒருவருடன் சுதாவுக்கு தொடர்பு ஏற்பட்டதால், அவர் வீட்டைவிட்டு வெளியேறி அந்த நபருடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பெரம்பலூர் குடும்ப நல நீதிமன்றத்தில் காமராஜிடம் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு 2020-ம் ஆண்டு சுதா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று காலை 10 மணிக்கு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக சுதா வந்தார். அப்போது, நீதிமன்ற நுழைவாயில் முன்பு சுதாவை காமராஜ் கத்தியால் சரமாரியாக குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், சுதாவின் கால் மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன.

இதைக்கண்ட நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் அழகேசன், காமராஜை தடுத்தபோது, அவருக்கும் கையில் கத்திக் குத்து விழுந்தது. ஆனாலும், அழகேசன் துணிச்சலாக செயல்பட்டு, காமராஜை பிடித்து பெரம்பலூர் போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீஸார் காயமடைந்த சுதாவை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இதற்கிடையே, மனைவியைக் கொலை செய்ய முயன்ற காமராஜை போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x