Published : 30 May 2016 06:18 PM
Last Updated : 30 May 2016 06:18 PM

ஜெயலலிதா அணுகுமுறை நாடகமேயன்றி அரசியல் நாகரிகம் அல்ல: கருணாநிதி

பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கீடு, சட்டப்பேரவையின் முதல் நாள் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாவின் அணுகுமுறை அரசியல் நாகரிகம் அல்ல என்றும், அவர் நடத்துவது நாடகம்தான் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை:

"தமிழகத்தின் நலன்களுக்காக, தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட" விருப்பம் தெரிவித்துள்ள ஜெயலலிதாவின் நாகரிகத்தையும், நல்லெண்ணத்தையும் தாங்கள் கெடுத்துவிடுவீர்கள் என்ற பிரச்சாரத்தைச் சிலர் முன்னெடுத்திருக்கிறார்களே?"

ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியேற்ற நிகழ்ச்சிக்கு தி.மு. கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அரசியல் நாகரிகம் கருதிச் சென்றிருந்தபோது, அவர் கூட்டத்தோடு கூட்டமாக அமர வைக்கப்பட்டதையும், எவ்வித “புரொட்டக்கால்” அம்சங்களும் அனுமதிக்காத பலர், முதல் வரிசையில் இடம் பெற்றிருந்ததையும் சுட்டிக்காட்டி நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

உடனே ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், “Had the Officers brought to my Notice that Thiru M.K. Stalin would be attending the event, I would have instructed the Officers in charge of the arrangements to provide him a Seat in the First Row, relaxing the norms in the Protocol Manual” என்று குறிப்பிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகத்தான், ஜெயலலிதா ஏதோ அரசியல் நாகரிகம் போற்ற முன் வந்திருப்பதாகவும், நான் அதைப் புரிந்துகொள்ளாமல் கெடுக்க முயற்சி செய்வதாகவும் சிலர் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

முன்பொரு முறை, ஜெயலலிதா பதவியேற்பு நிகழ்ச்சிக்குக் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் க.அன்பழகன் சென்றிருந்த போதும், உரிய மரியாதை கொடுத்து இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அப்போது ஜெயலலிதா என்ன விளக்கம் அளித்தார்? 8-3-2002 அன்று “தி இந்து” ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தி பின்வருமாறு:-

“She (Jayalalithaa) clarified that she had no knowledge of the Seating Order for V.I.Ps. at the Ceremony. She assumed that all proper arrangements had been made. Only after the Ceremony started did she notice Mr. Anbazhagan in the Sixth Row” என்று ஜெயலலிதா விளக்கம் அளித்திருந்தார்.

ஜெயலலிதா 2002 ஆம் ஆண்டு அளித்த விளக்கத்திலிருக்கும் அரசியல் நாகரிகத்திற்கும், பதினான்கு ஆண்டுகள் கழித்து இப்போது அளித்திருக்கும் விளக்கத்தில் உள்ள அரசியல் நாகரிகத்திற்கும், ஏதேனும் வித்தியாசம் உண்டா என்றால் நிச்சயமாக இல்லை என்பதை யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமா? புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் பதவியேற்க, சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள ஐந்தாண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நான் பேரவைக்குள் சென்றேன். நான் பேரவைக்குள் செல்வதை அறிந்த ஜெயலலிதா, “விருட்”டென்று எழுந்து வெளியேறினாரே; அவருடைய வெளிநடப்பு, அவர் திருந்திவிட்டார் என்பதையா காட்டுகிறது? அவர் அப்படி வெளியேறியது எவ்வகை அரசியல் நாகரிகத்தின்பாற்பட்டது?

தொடர்ந்து ஜெயலலிதாவின் தொலைக்காட்சியிலும், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேட்டிலும் என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும், தி.மு. கழகத்தைப் பற்றியும் பண்பாடற்ற - அநாகரிகமான மொழியில் தானே அர்ச்சிக்கிறார்கள்! அண்ணா சொன்னபடி “வாழ்க வசவாளர்கள்” என்று அனைத்தையும் கண்டும், கேட்டுக் கொண்டும் அமைதியாகத்தான் அரசியல் பயணம் செய்கிறேன்.

அவரது தொலைக்காட்சியில் நடப்பதும், நாளேட்டில் அர்ச்சிக்கப்படுவதும் ஜெயலலிதாவுக்குத் தெரியாமலா நடக்கிறது? பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் கலையை பிறர் அவருக்குப் போதிக்க வேண்டுமா, என்ன? இப்படி ஒரு பக்கம் அரசியல் நாகரிகத்தையும், பண்பாட்டையும் அடித்துத் துவைத்துக் காயப்படுத்துவதும்; மறுபக்கம் “இணைந்து செயல்பட” விருப்பம் தெரிவிப்பதைப் போல் நயவஞ்சக நாடகமாடுவதும்தான் அரசியல் நாகரிகம் என்றால்; நாடகத்தில் அடுத்து நடக்கப் போகும் காட்சி என்ன?" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x