Published : 29 Apr 2022 06:14 AM
Last Updated : 29 Apr 2022 06:14 AM

4 பேர் எதிர்த்து போட்டியிட மனு அளித்தும் மதுரை நகர் அதிமுக செயலராக செல்லூர் ராஜு மீண்டும் தேர்வு: தேர்தல் நடத்தாமலேயே போட்டியின்றி தேர்வானது எப்படி?

மதுரை: மதுரை மாநகர அதிமுக செயலாளர் பதவிக்கு 4 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்தபோதிலும் செல்லூர் ராஜுவே மாநகர் செயலாளராக மீண்டும் போட்டியின்றி தேர்வானதாக அறிவித்திருப்பது, நிர்வாகிகளை விரக்தி அடையச் செய்துள்ளது.

மதுரை மாநகர் அதிமுக அமைப்புத் தேர்தல் அண்மையில் நடந்தது. இதில் மாநகர் செய லாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மீண்டும் போட்டியிட்டார்.

தேர்தலை நடத்த முன்னாள் அமைச்சர் வளர்மதி, சென்னை புறநகர் மாவட்ட அதிமுக செய லாளர் கே.பி.கந்தன், ஜெ. பேரவை துணைச் செயலாளர் பெரும் பாக்கம் இ.ராஜசேகர் ஆகியோர் மதுரை வந்தனர்.

செல்லூர் ராஜுவை எதிர்த்து மாநகர் செயலாளர் பதவிக்கு போட்டியிட முன்னாள் மாநகர் செயலாளர் ஆர்.ராஜாங்கம், ஜெ. பேரவை மாநகர் செயலாளர் எஸ்எஸ் சரவணன், பகுதிச் செய லாளர்கள் கே.சாலைமுத்து, வி.கே.மாரிச்சாமி ஆகியோர் விருப்ப மனு அளித்தனர்.

செல்லூர் ராஜுவை மாநகர் செயலாளராக தேர்வு செய்ய தேர்தல் பார்வையாளர்கள் முடிவு செய்திருந்ததால் அவரை எதிர்த்துப் போட்டியிட வந்தவர்களிடம் விருப்ப மனுக்களை வாங்க மறுத்தனர். வாக்குவாதத்துக்குப் பின்னரே மனுவைப் பெற்றனர். மனுவை ஏற்றதால் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் மதுரை மாநகர் செய லாளராக செல்லூர் ராஜு தேர்வு செய்யப்பட்டதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

மேலும், அவைத் தலைவராக அண்ணாதுரை, இணைச் செய லாளராக குமுதா, துணைச் செயலாளர்களாக ராஜா, இந்திரா, பொருளாளராக பா.குமார், பொதுக்குழு உறுப்பினர்களாக கு.திரவியம், ரவிச்சந்திரன், சண்முக வள்ளி, சக்திமோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகிகள் பட்டியலில் செல்லூர் ராஜுவின் எதிர்கோஷ்டியினர் யாருமே இடம் பெறவில்லை.

இதுகுறித்து கட்சியினர் கூறியதாவது: கட்சித் தலைமை தற்போதைக்கு அவசரப் பொதுக்குழுவைக் கூட்ட ஏற்கெனவே பதவிகளில் இருந்தோரே தொடரட்டும் என்ற நிலைப்பாட்டோடு அவசர அவசர மாக அமைப்புத் தேர்தலை பெயரளவுக்கு நடத்தியுள்ளது.

மதுரையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே இதேநிலைதான்.

மதுரை மாநகரச் செயலாளர் பதவிக்கு செல்லூர் ராஜுவை எதிர்த்து விருப்ப மனு கொடுத் தோரை அழைத்து கட்சித் தலைமை பேசியது. அவர்களிடம் பிறகு பதவிகள் வழங்குவதாக வாக்குறுதி அளித்து விருப்ப மனுக்களை வாபஸ் பெற வைத் துள்ளனர்.

இனி செல்லூர் ராஜு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நிர்வா கிகளை மீண்டும் ஒதுக்கும் வேலையைத் தொடங்குவார். அதனால், மீண்டும் மாநகர அதிமுகவில் கோஷ்டிபூசல் ஏற்பட வாய்ப்புள்ளது. கட்சியில் தங்களை தக்க வைக்க முடியாதோர் மாற்றுக் கட்சிகளுக்கு செல்வார்கள். அவர்களை தக்க வைக்க கட்சித் தலைமை ஏதாவது பதவி வழங்க வேண்டும். இல்லையேல் மதுரை மாநகரில் கட்சி இன்னும் பலவீனமடையும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x