Published : 28 Apr 2022 08:38 PM
Last Updated : 28 Apr 2022 08:38 PM

ரூ.10 கோடியில் சென்னையில் வடிவமைப்பு நிலையம்: கைத்தறித் துறையின் 24 அறிவிப்புகள்

சென்னை: ரூ.10 கோடி செலவில் சென்னையில் சர்வதேச தரத்தில் வடிவமைப்பு நிலையம் உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனம் மூலம் சென்னை மற்றும் பெங்களூரு மூலமாக 500 புதிய வடிவமைப்புகள் உருவாக்குதல், அனைத்து பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் பட்டு ரகங்களின் நெசவுக்கான சேதார அளவீடு ஒரே சீரான அளவில் நிர்ணயம் செய்தல், துணிநூல் துறைக்கென தனி இணையதளம் (Website) மற்றும் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்குதல், தமிழகத்தில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறிகளை கணக்கெடுப்பு செய்து புவிசார் (Geo-tagging) மூலம் அடையாளப்படுத்தப்படும். என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்தார். அவர் வெளியிட்ட 24 முக்கிய அறிவிப்புகள்:

கைத்தறி

> தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனம், (National Institute of Fashion Technology-NIFT) சென்னை மற்றும் பெங்களூரு மூலமாக 500 புதிய வடிவமைப்புகள் (Designs) உருவாக்கப்படும்.

> ரூபாய் 50 லட்சம் செலவில் தேசிய வடிவமைப்பு நிறுவனம்,(National Instituteof Design-NID) அகமதாபாத் மூலமாக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் 50 வடிவமைப்பாளர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்படும்.

> காஞ்சிபுரத்திலுள்ள தமிழ்நாடு சரிகை ஆலையின் உட்கட்டமைப்புகள் ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டு உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும்.

> தமிழகத்தில் உள்ள கைத்தறி ரகங்களில் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு கைத்தறி அங்கீகார அமைப்பு (Tamil Nadu Handloom Authenticity Body) ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஏற்படுத்தப்படும்.

> அனைத்து பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் பட்டு ரகங்களின் நெசவுக்கான சேதார அளவீடு ஒரே சீரான அளவில் நிர்ணயம் செய்யப்படும்.

> ரூ.10 கோடி செலவில் சென்னையில் சர்வதேச தரத்தில் வடிவமைப்பு நிலையம் உருவாக்கப்படும்.

> தமிழகத்திலுள்ள சாதாரண விசைத்தறிகளின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் 5000 விசைத்தறிகளில் மின்னணு பலகைகள் (Electronic Panel Board) பொருத்த 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

> நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை கணினிமயமாக்க ரூபாய் 50 லட்சம் செலவில் மென்பொருள் உருவாக்கி செயல்படுத்தப்படும்.

> தேசிய கைத்தறி வளர்ச்சி திட்டத்தின் கீழ் 6 புதிய வட்டார நிலை குழுமங்களில் 1377 கைத்தறி நெசவாளர்களுக்கு தறிகள், உபகரணங்கள் மற்றும் தறிக்கூடங்கள் ரூபாய் 158.60 லட்சம் மதிப்பில் வழங்கப்படும்.

> ரூ.10 கோடி செலவில் தமிழகத்தில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறிகளை கணக்கெடுப்பு செய்து புவிசார் (Geo-tagging) மூலம் அடையாளப்படுத்தப்படும்.

> கைத்தறிகளுக்கான பிரத்யேக சந்தைப் பிரிவை உருவாக்கி, விற்பனையை ஊக்குவிக்க, "ஹேண்ட்லூம்ஸ் ஆப் இந்தியா” என்ற பெயரில் கைத்தறி விற்பனை இணைவு அங்காடி ரூபாய் 10 கோடி மதிப்பில் விற்பனை இணைவு அங்காடி ரூபாய் 10 கோடி ஏற்படுத்தப்படும்.

> தமிழகத்தின் பாரம்பரிய கைத்தறி ரகங்கள் மற்றும் தமிழகத்தின் புவிசார் குறியீடு பதிவு பெற்ற கைத்தறி தயாரிப்புகள் மின்னணுமயமாக்கி ஆவணப்படுத்தப்படும்.

> மாநில அளவிலான இளம் வடிவமைப்பாளர்களிடையே போட்டித் தேர்வு நடத்தி சிறந்த வடிவமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு விருது மற்றும் பரிசு தொகை வழங்கப்படும்.

துணிநூல் துறை

> தமிழகத்திலுள்ள ஜவுளி பதனிடும் தொழில் சார்ந்த பொதுக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்கெனவே சுத்திகரிப்பு செய்த பின்னர் இருப்பாக உள்ள மீதமுள்ள கழிவு உப்புகளை சுற்றுச்சூழல் பாதிப்பின்றி அகற்றிடத் தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் (Research & Development) ஊக்குவிக்கப்படும்.

> தமிழகத்தில் ஆட்டோமொபைல், பாதுகாப்பு மற்றும் விளையாட்டுத் துறைகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அதன் தொடர்புடைய தொழில்நுட்ப ஜவுளிகளின் (Technical Textiles) உற்பத்தியில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், உயர் செயல்திறன் கொண்ட ஆட்டோமொபைல் துறை (Mobiltech), பாதுகாப்புத்துறை (Defence - Protech) மற்றும் விளையாட்டுத்துறைக்குத் (Sportech) தேவையான தயாரிப்புகளை உற்பத்தி செய்ய முன்வரும் தொழில் முனைவோரை ஊக்குவிக்க, நிதியுதவி வழங்கப்படும்.

> மருத்துவம் (Medical), ஆட்டோமொபைல் (Automobile) மற்றும் பாதுகாப்பு (Defence) துறைகளைச் சார்ந்த தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியினை நமது மாநிலத்தில் ஊக்குவிக்கும் பொருட்டு மேம்பட்ட செயல்திறனுடன் கூடிய தொழில்நுட்ப ஜவுளி (Technical Textiles) உற்பத்திக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் (Research and Development) மேற்கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

> ரூபாய் 1 கோடி செலவில் சென்னையில் ஜவுளி நகரம் (Textile City) அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் விரிவான செயல் திட்ட ம் (Detailed Project Report) தயாரிக்கப்படும்.

> தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளை உலகளவில் காட்சிப்படுத்தவும், சர்வதேச அளவில் சந்தைப்படுத்தவும், சர்வதேச ஜவுளிக் கண்காட்சிகளில் (International Textile Fair) தமிழகத்திற்கென தனி அரங்கு (Tamilnadu Pavilion) அமைத்து அதில் தமிழக ஜவுளித் துறை சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

> ரூபாய் 1 கோடி செலவில் துணிநூல் துறைக்கென தனி இணையதளம் (Website) மற்றும் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு (IT Infrastructure) வசதிகள் உருவாக்கப்படும்.

> தமிழகத்தில் ஜவுளித் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஆலோசனைகள் வழங்க தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (Technical Advisory Committee) அமைக்கப்படும்.

> தமிழகத்தில் இயங்கி வரும் அண்ணா , பாரதி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலைகளில் 10 ஆட்டோ கோனர் (Auto coner) இயந்திரங்கள் நிறுவ வழிவகை
செய்யப்படும்.

> அண்ணா மற்றும் பாரதி கூட்டுறவு நூற்பாலைகளில் Compact Spinning நிறுவ வழிவகை செய்யப்படும்.

> தமிழகத்தில் இயங்கும் 6 கூட்டுறவு நூற்பாலைகளில் நூல் பதப்படுத்தும் இயந்திரங்கள் (Yarn Conditioning Machine) நிறுவ வழிவகை செய்யப்படும்.

> ரூபாய் 1.75 கோடி செலவில் கன்னியாகுமரி, பாரதி மற்றும் புதுக்கோட்டை கூட்டுறவு நூற்பாலைகளில் 11கிலோ வோல்ட் தனி உயர் மின்னழுத்த மின் பாதைகள் (Dedicated Electrical Power feeder line) அமைக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x