திருப்பூர் | சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: நூற்பாலை தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை 

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

திருப்பூர்: 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வெள்ளகோவில் நூற்பாலைத் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை அளித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே அய்யனூரைச் சேர்ந்தவர் பிரகாஷ்குமார் (29). நூற்பாலைத் தொழிலாளியான இவர் கடந்த ஆண்டு டிச. மாதம் 17 வயது சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் சிறுமியிடம் இதுகுறித்து வெளியே சொன்னால், பெற்றோரை கொலை செய்துவிடுவதாகக் கூறி மிரட்டி தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், காங்கயம் அனைத்து மகளிர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் போக்சோ, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, பிரகாஷ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

குற்றஞ்சாட்டப்பட்ட பிரகாஷ்குமாருக்கு போக்சோ சட்டப் பிரிவின் கீழ், 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுகந்தி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த காங்கயம் மகளிர் போலீஸாரை கோவை மண்டல டிஐஜி முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் ஆகியோர் பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in