

லத்தூர்: செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடூர் ஊராட்சியில் திருநங்கைகளுக்கு 50 வீடுகள் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் நேற்று தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடூர் ஊராட்சியில் சமூக நலன் மகளிர் உரிமைத் துறை மற்றும் மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் பொறுப்பு நிதியின் மூலம் திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டும் பணி தொடங்கியது. இந்தப் பணியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பேசியது:
திருநங்கைகளின் நலனின் அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடூர் ஊராட்சியில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டித்தர சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் சமூக பொறுப்பு நிதியிருந்து தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 50 வீடுகள் கட்டுவதற்காக திட்டமிடப்பட்டு பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன.
மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் பொது மேலாளர் ஜீ ஜியாங் கியு, மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) கவிதா பங்கேற்றனர்.