Published : 30 Jun 2014 09:52 PM
Last Updated : 30 Jun 2014 09:52 PM

ஸ்ரீரங்கம் தொகுதியில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா கூறிய குட்டிக் கதை

முதல்வர் ஜெயலலிதா இன்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.



அவர் பேசியது வருமாறு:

காவேரிக்கும், கொள்ளிடத்திற்கும் நடுவே அமைந்துள்ளதும்; ஏழுலகங்கள் என்று பக்தர்களால் நம்பப்படும் ஏழு சுற்று மதில் சுவர்களின் நடுவில் அமைந்துள்ளதுமான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் இந்த இனிய அரசு விழாவிலே பங்கேற்று, ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்காக 193 கோடியே, 14 லட்சத்து, 97 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளைத் திறந்து வைத்தல்; 171 கோடியே, 27 லட்சத்து, 19 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்; பல்வேறு துறைகளின் சார்பாக 63 கோடியே, 49 லட்சத்து, 49 ஆயிரம் ரூபாய் செலவில் நலத் திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்குதல் என 427 கோடியே 91 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை அளிக்கவும், உங்களை எல்லாம் கண்டு உங்களிடம் மீண்டும் என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், கிடைத்துள்ள வாய்ப்பு குறித்து நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், மானிய விலையில் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம், கட்டணமில்லா கல்வி வழங்கும் திட்டம், விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் உழவர் பாதுகாப்புத் திட்டம், ஏழை எளிய மக்கள் உயர் சிகிச்சை பெற முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம், விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் மலிவு விலையில் தரமான உணவு வழங்கும் அம்மா உணவகங்கள், அரசுப் பேருந்துகளில் பயணிப்போருக்கு குறைந்த விலையில் மினரல் 2 வாட்டர் வழங்கும் அம்மா குடிநீர்த் திட்டம், அம்மா உப்பு, அம்மா மருந்தகங்கள், சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் உட்பட பல்வேறு நலத் திட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழக மக்களின் ஜீவாதாரப் பிரச்சனையாக விளங்கும் காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை உச்ச நீதிமன்றம் மூலம் போராடி மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து தமிழக மக்களின் உரிமையை நான் நிலைநாட்டியுள்ளேன். இதனை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் ஏதுவாக, காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையைப் பொறுத்த வரையில், எனது உத்தரவின் பேரில் தமிழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட வலுவான வாதங்களையடுத்து, தமிழகத்திற்கு உரிய நியாயமான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினால் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்தும் வகையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் மத்திய நீர்வளக் குழுமம் ஆகியவற்றின் சார்பில் தலா ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் மூன்று பேர் கொண்ட ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்படவேண்டும்.

தமிழ்நாடு மற்றும் கேரளா சார்பில் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சரவையும் மத்திய நீர்வளக் குழுமம் சார்பில் அதன் பிரதிநிதியை நியமிக்க முடிவு செய்துள்ளது.

இந்தக் குழு அமைக்கப்பட்டவுடன், அணையின் நீர் மட்டத்தை முதற் கட்டமாக 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனது மூன்று ஆண்டு கால ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை முன்னிறுத்தியும், செய்யப் போகும் சாதனைகளை எடுத்துக் கூறியும் மக்களவைத் தேர்தலில் நான் உங்களிடம் வாக்கு சேகரித்தேன்.

ஆனால், எதிரணியினரோ பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். என்னை வசை பாடினர். என் மீதும், எனது அரசின் மீதும் புழுதி வாரி இறைத்தனர். இறுதியில் எனக்கும், மக்களாகிய உங்களுக்கும் இடையே உள்ள அன்பு, பாசம், அரவணைப்பு ஆகியவை எதிரணியினரை மண்ணைக் கவ்வச் செய்தன.

கடவுளுக்கும் நமக்கும் இருக்கும் தூரம் என்ன?- குட்டிக்கதை

முன்னொரு காலத்தில் மன்னர் ஒருவர் ஆட்சி புரிந்து வந்தார். ஒரு நாள் அவர் மனதில், “கடவுள் இருக்கும் இடத்திற்கும், நமக்கும் எவ்வளவு தூரம் இருக்கும்?” என்ற வினா எழுந்தது. உடனே அரச சபையை கூட்டி அனைவரிடமும் இதற்கான விடையை வினவினார் மன்னர். யாருக்கும் இதற்கான விடை தெரியவில்லை. இதற்கான விடையைத் தெரிந்து கொள்ள ஊருக்கு வெளியிலிருந்து ஒரு முனிவர் வரவழைக்கப்பட்டார்.

அந்த முனிவரிடம், “கடவுள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று வினவினார் மன்னர்.

அதற்கு அந்த முனிவர், “கடவுள் கூப்பிடுகிற தூரத்தில் தான் இருக்கிறார்” என்று பதில் அளித்தார்.

“அப்படியானால், கடவுளை அழைத்தால் உடனே வந்து விடுவார் அல்லவா?” என்று கேட்டார் மன்னர். அதற்கு அந்த முனிவர், “எந்த இடத்தில் கடவுள் இருப்பதாக நீ நினைக்கிறாயோ அதைப் பொறுத்தது” என்றார்.

“புரியும்படி கூறுங்கள்” என்று அந்த மன்னர் கேட்டுக் கொண்டார். 3 இதற்கு பதில் அளித்த முனிவர், “துரியோதனன் சபையில் திரௌபதி அவமானப்படுத்தப்பட்ட போது, “வைகுண்ட வாசா! காப்பாற்று” என்று கிருஷ்ணரை அழைத்தாள் திரௌபதி. ஆனால் கிருஷ்ணர் வரவில்லை.

“துவராகை நாயகனே!” என்னை காப்பாற்று என்று அழைத்தாள் திரௌபதி. அப்போதும் கிருஷ்ணன் வரவில்லை. “இதயத்தில் இருப்பவனே!” என்று கடைசியாக அழைத்தாள் திரௌபதி. உடனே பகவான் கிருஷ்ணர் தோன்றி திரௌபதியின் மானத்தைக் காத்தார். கடவுள் எவ்வளவு தொலைவில் இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த நினைப்பிற்கு தகுந்தவாறு உடனே வந்து கடவுள் அருள் புரிவார். எந்த இடத்தில் இருந்தாலும் உங்களின் குரல் கடவுளுக்கு கேட்கும்.

உள்ளத்தில் கடவுள் இருப்பதாக நினைத்து அழைத்தால் உடனே வந்து அருள் பாலிப்பார்” என மன்னருக்கு விளக்கம் அளித்தார் அந்த முனிவர். கடவுளைப் போலத் தான் மக்களும். அதனால் தான், “மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்றார் பேரறிஞர் அண்ணா. அப்படியானால், மக்களாகிய நீங்கள் தானே மகேசன்? மகேசனாகிய மக்கள் எப்போதும் என் இதயத்தில் இருக்கிறீர்கள். உங்கள் இதயங்களிலும் நான் என்றென்றும் குடிகொண்டு இருக்கிறேன். அதனால் தான், மக்களவைத் தேர்தலில் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அமோகமான வெற்றியை நீங்கள் அளித்தீர்கள்.

எனது தலைமையிலான மூன்றாண்டு கால ஆட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளீர்கள். தமிழக மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க அயராது பாடுபடுவேன் என்ற உறுதியை நான் உங்களுக்கு இந்தத் தருணத்தில் அளிக்க விரும்புகிறேன்.

நான் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில் நான்கு முறை இங்கு வந்து திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தும், நலத் திட்ட உதவிகளை வழங்கியும் உங்கள் முன் உரையாற்றி உள்ளேன். தற்போது ஐந்தாவது முறையாக இன்று உங்கள் முன் உரையாற்றிக் கொண்டு இருக்கிறேன். உங்களின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற நான் முதன் முதலாக 19.6.2011 அன்று இங்கு வந்தேன். அப்போது, 190 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினேன்.

இரண்டாவது முறையாக 13.2.2012 அன்று நான் வந்த போது, 160 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கும், மூன்றாவது முறையாக 13.9.2012 அன்று நான் இங்கு வந்த போது 82 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கும், 3.6.2013 அன்று நான்காவது முறையாக நான் வந்த போது 1,752 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கும், என மொத்தம் 2,185 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5,200 திட்டங்களுக்கு நான் அடிக்கல் நாட்டியுள்ளேன். உங்களின் பயன்பாட்டிற்காக என்னால் ஏற்கெனவே திறந்து வைக்கப்பட்டுள்ள திட்டங்களில் முக்கியமானவற்றை பட்டியலிட விரும்புகிறேன்.

தோட்டக்கலை வல்லுநர்களின் எதிர்காலத் தேவையினைக் கருத்தில் கொண்டு மகளிருக்காகவே தோட்டக் கலை மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஒன்று, மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட நவலூர் குட்டப்பட்டு என்ற இடத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் ஆண்டுதோறும் 40 மாணவிகள் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை:

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அதி நவீன பரிசோதனை மையம், Infusion Pump, Monitor, Artery Blood Gas Analyser, Anesthesia Work Station ஆகிய நவீன மருத்துவ உபகரணங்கள், குளிர்சாதன வசதியுடன் கூடிய சிறப்பு அறைகள், பிரசவ வார்டு, பேறு கால நிலையம், அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் மற்றும் பெட்டவாய்த்தலை துணை மின் நிலையங்கள் 14 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ளன. அதவத்தூர் மற்றும் முத்தப்புடையான் பட்டியில் 3 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் 6 கிடங்குகள் கட்டித் தரப்பட்டுள்ளன.

அந்தநல்லூர் மற்றும் நாகமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளன. மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட சோமரசம் பேட்டையில் ஒரு புதிய ஆரம்ப சுகாதார நிலையமும், மணப்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட மரவனூர் கிராமத்தில் ஒரு புதிய ஆரம்ப சுகாதார நிலையமும் அமைக்கப்பட்டு உள்ளன. மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள இனாம் குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் வட்டம், நவலூர் குட்டப்பட்டு என்ற இடத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசிய சட்டப் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 100 மாணவ மாணவியர் சேர்க்கையுடன் துவங்கப்பட்ட இந்த தேசிய சட்டப் பள்ளியில் நடப்பு ஆண்டில் 200 மாணவ, மாணவியரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதரை தரிசிப்பதற்காக அம்மா மண்டபம் படித் துறையில் நீராடி, ராஜ கோபுரம் வரை பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, மழை மற்றும் வெயில் காலங்களில் ஏற்படும் சிரமத்தை நீக்கும் வகையில் மேற் கூரையுடனான நடைபாதை ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் வட்டம், சேதுராப்பட்டி கிராமத்தில் 128 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய தகவல் தொழில் நுட்பக் கழகம், 60 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் அரசு பொறியியல் கல்லூரி, 13 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் பலவகை தொழில் நுட்பக் கல்லூரி ஆகியவற்றிற்கான கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்படி கல்லூரிகள் தற்போது தற்காலிக கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இது தவிர, ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நவலூர்குட்டப்பட்டு என்ற இடத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 1,505 மாணவ, மாணவியர் பயன் அடைந்து வருகின்றனர். நடப்பாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், ஒரு நாளைக்கு தோராயமாக 2,500 பக்தர்கள் பயன் அடைந்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி மக்களின் வசதிக்காகவும், வளர்ச்சிக்காகவும், 35 புதிய பேருந்து வழித் தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை போன்ற ஏராளமான திட்டங்கள் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இது தவிர, கடந்த மூன்று ஆண்டு காலத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு மட்டும் 453 கோடியே 40 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சீரோடும், சிறப்போடும் நடைபெற்று வரும் இந்த வண்ணமிகு விழாவில், ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் பயனடையும் வண்ணம் 193 கோடியே 14 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் 5 மதிப்பிலான 1,123 முடிவுற்ற பணிகளை இன்று திறந்து வைத்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். கொள்ளிடக் கரையில், பஞ்சக் கரை சாலை அருகே 6 ஏக்கர் 40 சென்ட் நிலப் பரப்பில் 47 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய சுமார் 1,000 யாத்திரிகர்கள் தங்கும் வகையிலான விடுதியினை நான் இன்று திறந்து வைத்துள்ளேன். இந்த விடுதியில், டார்மிட்டரி, குடும்பத்துடன் தங்கும் தனி அறைகள், உணவு விடுதி, பாதுகாப்புப் பெட்டகம், குளியல் அறைகள், கழிப்பறைகள், வாகனங்கள் நிறுத்தும் இடம் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமல்லாமல், திருவானைக்காவல் மற்றும் சமயபுரம் திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களும் பயன் அடைவார்கள். மழை நீரை சேமிக்கும் பொருட்டும், மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரைத் தடுத்து சேமிக்கும் வகையிலும், 32 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீரங்கம் வட்டத்திற்குட்பட்ட முத்தரச நல்லூர் அருகே கம்பரசம் பேட்டையில் காவேரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையினை இன்று நான் திறந்து வைத்துள்ளேன்.

இதன் மூலம் ஸ்ரீரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். 46 கோடியே 35 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், குடிநீர் பணிகள், தெரு விளக்குகள், தார் சாலைகள், சிமெண்ட் சாலைகள், பாலங்கள் அமைத்தல், தடுப்புச் சுவர், கழிவறைகள், பள்ளிக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற பணிகளை மக்களின் பயன்பாட்டிற்காக இன்று நான் திறந்து வைத்துள்ளேன்.

திருச்செந்துறையில் 4 கோடி ரூபாய் செலவில் குளிர் பதன வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த வாழை வணிக வளாகம் இன்று என்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வளாகத்தில், 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர் பதன அறை, வாழைத் தார்களை கழுவி, தரம் பிரித்து, சிப்பம் கட்டும் வசதி, பரிவர்த்தனைக் கூடம்; வணிகர்களுக்கான கடைகள், சாலை, சுகாதார வசதியுடன் கூடிய பொது கட்டமைப்பு, தடையில்லா மின்சாரம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம், வாழை விவசாயிகளும், நுகர்வோரும் பெரிதும் பயனடைவர். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில், CT Scan, இரண்டு டயாலிசிஸ் யூனிட்டுகள், நான்கு வெண்டிலேட்டர்கள், Auto Analyser with ELISA reader, C-Arm, Eye Operating Microscopeபோன்ற அதி நவீன மருத்துவ உபகரணங்கள் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டு, இன்று என்னால் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 38 லட்சம் ரூபாய் செலவில் பெட்டவாய்த்தலையில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் 81 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு இன்று என்னால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, 23 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் திருவானைக்காவல் கோயில் பகுதியில் 110/11 கி.வோ. புதிய துணை மின் நிலையம்; 7 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் மகளிர் தோட்டக்கலை கல்லூரி அலுவலகக் கட்டடம்; 6 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம்; திருச்சிராப்பள்ளி-குழுமணி குடமுருட்டி ஆற்றின் குறுக்கே 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம்; 2 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் பூங்குடி மற்றும் எட்டரை அரசு மேல்நிலை பள்ளிகளில் புதிய கட்டடங்கள்; 45 லட்சம் ரூபாய் செலவில் உத்தமர் சீலி மற்றும் திருப்பாய்த் துறையில் கால்நடை மருந்தகக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மக்கள் பயன்பாட்டிற்காக இன்று என்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 6 இந்த இனிய விழாவில் 171 கோடியே 27 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1,655 பணிகளுக்கு இன்று நான் அடிக்கல் நாட்டியுள்ளேன் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவற்றில் முக்கியமான ஒரு சில பணிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

திருச்சிராப்பள்ளி மாநகரின் மையப் பகுதியில் அமைந்து உள்ள மகாத்மா காந்தி பூ, காய்கனிகள் மார்க்கெட் பகுதியில், நிலவும் இட நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீரங்கம் தொகுதி, கள்ளிக்குடி கிராமத்தில் 9.79 ஏக்கர் நிலப்பரப்பில் 77 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் காய்கனிகள் மற்றும் மலர்களுக்கான மத்திய வணிக வளாகம் அமைக்க இன்று நான் அடிக்கல் நாட்டி உள்ளேன். இங்கு 1,000 கடைகள், 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு, தரம் பிரித்து வகைபடுத்தும் களம், தரம் பிரித்து சிப்பமிடும் கருவி, அகலமான உட்புற சாலைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த வணிக வளாகம் அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்தநல்லூர், மணிகண்டம் மற்றும் மணப்பாறை ஒன்றியங்களுக்கு உட்பட்ட 212 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் 48 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு இன்று நான் அடிக்கல் நாட்டியுள்ளேன். இத்திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 37 ஆயிரம் பேர் பயனடைவர். இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 6.80 மில்லியன் லிட்டர் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். இந்தத் திட்டம் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இதே போன்று, 13 கோடியே 98 லட்சம் ரூபாய் செலவில் 666 சூரிய ஒளி மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள்; 2 கோடியே 56 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவில் “தாய்” திட்டத்தின் கீழ் குடிநீர் பணிகள் ; தெரு விளக்குகள் அமைத்தல், சிமெண்ட் சாலை மற்றும் தார்ச் சாலை பணிகள் ; தடுப்புச் சுவர் மற்றும் சிறு பாலம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ; 4 கோடியே 9 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் 341 தொகுப்பு வீடுகள்; 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டடங்கள்; 12 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் செலவில் ஸ்ரீரங்கம் குறுவட்ட நில அளவர் குடியிருப்பு மற்றும் அலுவலகக் கட்டடம்; 66 லட்சம் ரூபாய் செலவில் மறவனூர், ராம்ஜி நகர், வியாழன் மேடு ஆகிய கிராமங்களில் கால்நடை மருத்துவக் கட்டடங்கள்; 23 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் மணப்பாறை வட்டம், கண்ணுடையான் பட்டி அரசு மேல் நிலைப் பள்ளிக்கு 2 வகுப்பறை கட்டடம் மற்றும் ஆய்வகக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நான் அடிக்கல் நாட்டியுள்ளேன் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது தவிர 63 கோடியே 49 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 25,875 பயனாளிகளுக்கு இன்று நான் வழங்க உள்ளேன். அத்தனை பயனாளிகளுக்கும் நானே உதவிகளை வழங்க வேண்டும் என்ற விருப்பம் என் மனதில் இருந்தாலும், நேரத்தின் அருமை கருதி ஒரு சிலருக்கு மட்டும் நலத் திட்ட உதவிகளை இந்த மேடையில் வழங்க உள்ளேன்.

நான் மேடையில் உதவிகளை வழங்கிய பின்பு இன்றே அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் நலத்திட்ட உதவிகளை மற்ற பயனாளிகளுக்கு வழங்குவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எவ்வித குறிக்கோளுமின்றி எனது அரசின் மீது புறஞ்சொல்லி திரிவதை மட்டுமே லட்சியமாகக் கொண்டு, உண்மைக்கு மாறான வகையில், நியாயமற்ற முறையில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட எதிரணிகளுக்கு தக்கப் பாடம் புகட்டிய 7 உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். குறை சொல்லி திரிபவர்கள் என்றவுடன் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

இன்னொரு குட்டிக்கதை:

மன்னரிடம் பரிசு கேட்டு இரு புலவர்கள் சேர்ந்து வந்தனர். மன்னர் இருவரையும் தனித் தனியாக அழைத்துப் பேசினார். முதல் புலவரிடம், “உங்களோடு வந்திருக்கும் புலவர் எப்படிப்பட்டவர்? என்று கேட்டார் மன்னர்.

அதற்கு முதல் புலவர், “அவர் ஒரு மக்கு. எருமை” என்று கூறினார். இதைக் கேட்ட மன்னர், “நன்றி புலவரே, நாளை காலை அரசவைக்கு வாருங்கள்” என்று கூறினார். பின்னர் இரண்டாவது புலவரை அழைத்து, “உங்களோடு வந்திருக்கும் புலவர் எப்படிப்பட்டவர்?” என்று மன்னர் கேட்டார். அதற்கு இரண்டாவது புலவர், “அவர் ஒரு மடையர், கழுதை” என்றார்.

இதைக் கேட்ட மன்னர், “நன்றி புலவரே. நாளை காலை அரச சபைக்கு வாருங்கள்” என்று கூறி இருவரையும் அனுப்பி வைத்தார். மறுநாள் சபை கூடியது. இரு புலவர்களும் வந்து காத்திருந்தனர். “புலவர்களே, உங்களில் ஒருவரை மற்றவர் எருமை என்றும், கழுதை என்றும் நீங்கள் சொன்னீர்கள். எருமைக்கு பரிசு கொடுத்தால் கழுதைக்கு கோபம் வரும். கழுதைக்குப் பரிசு கொடுத்தால் எருமைக்கு கோபம் வரும். நானோ மனிதர்களில் சிறந்த புலவர்களுக்குப் பரிசு தருபவன். இங்கே எருமைக்கும், கழுதைக்கும் வேலையில்லை” என்று கூறினார் மன்னர்.

இந்த மக்களவைத் தேர்தலில் நீங்கள் அளித்த தீர்ப்பு இந்த மன்னர் கூறிய தீர்ப்பு போல் அமைந்துள்ளது. அதாவது, கடமையைச் செய்பவர்களை, உரிமையைத் தட்டிக் கேட்பவர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்துள்ளீர்கள். புறஞ்சொல்லி திரிபவர்களை நீங்கள் புறக்கணித்துள்ளீர்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை எனக்கு நல்கிய தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை மீண்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தமிழர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க, தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்ட, “அமைதி, வளம், வளர்ச்சி” என்ற பாதையில் தமிழகத்தை அழைத்துச் செல்ல உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நீங்கள் முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விழா சீரோடும், சிறப்போடும் அமைந்திட திட்டமிட்டு பணியாற்றிய மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன், அனைத்துத் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பேசினார் ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x