தமிழகம், புதுச்சேரியில் மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகம், புதுச்சேரியில் மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னையில் விடிய விடிய மழை

இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ் நாட்டின் பல பகுதிகளில் நேற்று மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 100 மி.மீ. மழை பதிவாகியது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:

இலங்கை, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் அருகே தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள் ளது. அதன்காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம்.

இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும். தென் தமிழகத்திலும், வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும். குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வட தமிழகத்தை நோக்கி மெதுவாக நகர்கிறது. கடல் பகுதியில் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. அதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். தூத்துக்குடி, குளச்சல், நாகை, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னையில் விடிய விடிய மழை:

சென்னையில் இரவு முழுவதும் நகரில் பரவலாக பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. கடந்த 2 மாதங்களாக கடும் வெயிலால் அவதியுற்ற சென்னைவாசிகள் இந்த மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in