புதிய பணியிடங்கள் உருவாக்க தடை: மின்வாரியம் உத்தரவு

புதிய பணியிடங்கள் உருவாக்க தடை: மின்வாரியம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: புதிய பணியிடங்களை உருவாக்க தடைவிதித்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு மின்வாரியம், செலவைக் குறைக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, மின்வாரிய அலுவலகங்களில் தொலைபேசி, இணையதளம் போன்றவற்றுக்கான செலவினங்களைக் குறைக்க வேண்டும். புதிதாக வாகனம், மரச் சாமான்கள் வாங்கக் கூடாது. ஊழியர் நலத்திட்டங்களுக்கு முன்பணம் வழங்குவதை நிறுத்திக் கொள்ளலாம். விருந்து போன்ற கேளிக்கைகளுக்கு நிதி வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

பழுதடையும் இயந்திரங்களை முடிந்த அளவுக்கு பழுது பார்த்து அவற்றையே பயன்படுத்த வேண்டும். 5 நட்சத்திர ஓட்டல்களில் இயக்குநர், அதிகாரிகள் மின்வாரிய செலவில் தங்கக் கூடாது. உயர் அதிகாரிகள் தங்களுக்கென தனிப்பட்ட முறையில் பணியாளர்களை நியமிக்கக் கூடாது. பயிற்சிக்காக ரூ.10 ஆயிரத்தைத் தாண்டி செலவிடக் கூடாது. எந்த நிலையிலும், புதிய பணியிடங்களை அரசின் முன் அனுமதியின்றி உருவாக்கக் கூடாது.

அத்தியாவசியமாக புதிய பணியிடங்களை உருவாக்க நேர்ந்தாலும், அதற்கான முன்மொழிவில் பழைய பணியிடங்கள் சிலவற்றை ஒப்படைக்க வேண்டும் என, மின்வாரிய செயலர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in