Last Updated : 26 Apr, 2022 09:21 PM

 

Published : 26 Apr 2022 09:21 PM
Last Updated : 26 Apr 2022 09:21 PM

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக மாநில நிர்வாகி சஜீவனிடம் போலீஸார் விசாரணை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகரும், மரம் சார்ந்த ஃபர்னீச்சர் பொருட்கள் வியாபாரியுமான சஜீவனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீலகிரி மாவட்ட போலீஸார், சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ராய், சம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கனகராஜ், சம்பவம் நடந்த சில நாட்களில், சாலை விபத்தில் உயிரிழந்தார். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமடைந்தது. காவல்துறை அதிகாரிகள் அடங்கிய கூடுதல் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் இவ்வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தினர். பின்னர், சில மாதங்களுக்கு முன்னர் இவ்வழக்கு தொடர்பாக உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சசிகலாவிடம் விசாரணை: இவ்வழக்கு குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்ட 210-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். இந்நிலையில், கோடநாடு எஸ்டேட்டில் மர வேலைப்பாடுகள் செய்த, மரம் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரியும், அதிமுக வர்த்தகர் பிரிவு மாநில தலைவருமான சஜீவனிடம் போலீஸார் இன்று (ஏப்.26) விசாரணை நடத்தினர். கோவை போலீஸ் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள, விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் வைத்து போலீஸார் இன்று அவரிடம் விசாரணை நடத்தினர். காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை அவரிடம் விசாரணை நடந்தது. தனிப்படை போலீஸார் மட்டுமின்றி, ஐஜி சுதாகர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் அவரிடம் விசாரித்தனர்.

சஜீவனிடம் விசாரணை: கோடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவுக்குள் சென்று வந்தவர் சஜீவன். அங்கு 90 சதவீத மர வேலைப்பாடுகளை சஜீவன் தான் செய்து கொடுத்துள்ளார். எனவே, கோடநாடு எஸ்டேட்டின் விவரங்கள் தொடர்பாக தகவல்களை பெற அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், கொள்ளை சம்பவம் நடந்த சில மணி நேரத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சோதனைச்சாவடியில் போலீஸார் இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்தனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி போலீஸாரிடம் சஜீவனின் சகோதரர் சுனில் வலியுறுத்தியுள்ளார். சுனில் விடுவிக்க வலியுறுத்தி இருவர், கோடநாடு கொள்ளை சம்பவம் தொடர்பாக பின்னர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோடநாடு சம்பவம் நடந்த போது, சஜீவன் துபாயில் இருந்துள்ளார். குற்றவாளிகளை விடுவிக்க சகோதரர் வலியுறுத்தியது தொடர்பாகவும், சஜீவன் சம்பவம் நடந்த போது எதற்காக துபாய்க்கு சென்றார் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டது.

ஐஜி தகவல்: இதுகுறித்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர் கூறும்போது,‘‘ கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சஜீவனிடம் விசாரணை நடத்தப்பட்டது,’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x