Published : 26 Apr 2022 12:24 PM
Last Updated : 26 Apr 2022 12:24 PM

கருணாநிதி பிறந்தநாள் அரசு விழா; சிலை வைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாக இனி கொண்டாடப்படும் என்றும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் என்றும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு பதிலளித்து அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சி.வி.கணேசன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். முன்னதாக காலை 10 மணிக்கு கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் பேசியது: "தமிழர்களே, தமிழர்களே, நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும், கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்; கவிழ்ந்து விடமாட்டேன். தமிழர்களே, தமிழர்களே, என்னை நீங்கள் நெருப்பில் தூக்கிப் போட்டாலும், அதிலே நான் விறகாகத்தான் வீழ்வேன்; அடுப்பெரித்து நீங்கள் சமைத்துச் சாப்பிடலாம்,

தமிழர்களே, தமிழர்களே, நீங்கள் என்னைப் பாறையில் மோதினாலும், சிதறுத் தேங்காயாகத்தான் உடைவேன், நீங்கள் என்னை எடுத்துத் தின்று மகிழலாம்," என்ற வைர வரிகளுக்குச் சொந்தக்காரர் மட்டுமல்ல; தன்னுடைய வாழ்க்கையை அப்படியே வாழ்ந்து காட்டியவர்தான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, நம்மையெல்லாம் ஆளாக்கி விட்டு விட்டு, வங்கக் கடலோரம், தன் அன்பு அண்ணன் அருகே வாஞ்சைமிகு தென்றலின் தாலாட்டில் இருந்தபடி தமிழ்ச் சமுதாயத்தின் மகிழ்ச்சியைக் கண்ணுற்று வரும் கருணாநிதி.

நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் உண்டென்றால், அவர் ஒருவர்தான். 1957 முதல் 2016 வரை நடந்த தேர்தல்களில் எல்லாம் வென்றவர் அவர் மட்டும்தான். 1957-ல் குளித்தலை; 1962-ல் தஞ்சாவூர்; 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் சைதாப்பேட்டை; 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் அண்ணா நகர்; 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் துறைமுகம்; 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் சேப்பாக்கம்; 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் திருவாரூர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றார். 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து, 60 ஆண்டுகள் இந்த மாமன்றத்தின் உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி.

1984 ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். தமிழகத்தை ஐந்து முறை ஆண்டவர் கருணாநிதி. 10-2-1969 அன்று முதன்முறையாக; 15-3-1971 அன்று இரண்டாவது முறையாக; 27-1-1989 அன்று மூன்றாவது முறையாக; 13-5-1996 அன்று நான்காவது முறையாக; 13-5-2006 அன்று ஐந்தாவது முறையாக என ஐந்து முறை இந்த நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்று, 19 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் கருணாநிதி.

ஐந்து முறை ஆட்சியில் இருந்த காலத்தில் முதல்வர் கருணாநிதி உருவாக்கியதுதான் இன்று நாம் கண்ணுக்கு முன்னால் பார்க்கக்கூடிய நவீன தமிழகம். அன்னைத் தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி, மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு உயர்வு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம், மகளிருக்கும் சொத்திலே பங்குண்டு என்ற சட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களுக்கான சமூகநீதி உரிமைகள், உழவர்களுக்கு இலவச மின்சாரம், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி, சென்னை தரமணியில் டைடல் பார்க், சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம், சிப்காட், சிட்கோ தொழில் வளாகங்கள் உருவாக்கம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கியது, நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள்.

அவசர ஆம்புலன்ஸ் 108 சேவை அறிமுகம், இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மினி பஸ்களைக் கொண்டு வந்தது, உழவர் சந்தைகள் அமைத்தது, கைம்பெண் மறுமண நிதி உதவி, கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி ஆகிய திட்டங்கள், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு, பெண்களுக்காக 33 விழுக்காடு இடஒதுக்கீடு, இலவச எரிவாயு இணைப்புடன்கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்குதல், மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல், அனைவரும் இணைந்து வாழ தந்தைப் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது, உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலே இணைத்தது,

நுழைவுத் தேர்வு இரத்து, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கியது, சேலம் உருக்காலை, சேலம் புதிய இரயில்வே மண்டலம், நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கக்கூடிய திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஆசியாவிலேயே பெரிய அண்ணா நூலகம் ஆகியவை உருவாக்கம், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு மறுவாழ்வு வழங்குதல், ஏராளமான பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், கலை-அறிவியல் கல்லூரிகள் உருவாக்கியது,இப்படி நான் சொல்லத் தொடங்கினால் இன்று முழுவதும் என்னால் சொல்லிக் கொண்டேயிருக்க முடியும். இவைதான் தமிழகத்தின் அடையாளங்கள் என்றால், அந்த அடையாளங்களை எல்லாம் உருவாக்கியவர் கருணாநிதி.

தலைவர்களோடு தலைவர்களாக வாழ்ந்த தலைவர்தான் கருணாநிதி, பெரியார், அண்ணா, ராஜாஜி, காமராஜர், காயிதே மில்லத், பாரதிதாசன், பக்தவத்சலம், கி.ஆ.பெ.விசுவநாதன், எம்ஜிஆர், கண்ணதாசன், கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார்.தமிழகத்தில் மட்டுமல்ல; பரந்து விரிந்த இந்த இந்திய அரசியலுக்கே வழிகாட்டியாக இருந்தவர் தலைவர் கருணாநிதி.

இந்தியாவின் குடியரசுத் தலைவர்களாக இருந்த நீலம் சஞ்சீவிரெட்டி, கியானி ஜெயில்சிங், வி.வி.கிரி, சங்கர் தயாள் சர்மா, ஆர். வெங்கட்ராமன், கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜெ. அப்துல்கலாம், பிரதிபா பாட்டீல் ஆகியோரால் பாராட்டப்பட்டவர் தலைவர் கருணாநிதி. இந்தியாவின் தலைமை அமைச்சர்களாக இருந்த அம்மையார் இந்திராகாந்தி, சரண்சிங், வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோரால் போற்றப்பட்டவர் கருணாநிதி.

நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவிற்குத்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டன. இப்படி எல்லைகளைத் தாண்டி எல்லோரையும் வசப்படுத்தியவர் அவர்.

படைப்பாளிகளோடு போட்டியிடும் படைப்பாளி; கவிஞர்களில் தலைசிறந்த கவிச்சக்கரவர்த்தி; திரையுலகத்தினரில் மூத்த கலையுலகவாதி; அரசியல் உலகில் தலைசிறந்த அரசியல் ஆளுமை; நிருவாகத் திறனில் நுணுக்கமான திறமைசாலி; மேடை ஏறினால் வெல்லும் சொல்லுக்கு அவர்தான் சொந்தக்காரர்; அவையில் ஏறினால் அவர்தான் வெற்றிச் சூத்திரம் அறிந்தவர் என எல்லாவற்றிலும் முதல்வராக வாழ்ந்த முதல்வர் அவர்.

'என்னிடம் இருந்து செங்கோலைப் பறிக்கலாம்; எழுதுகோலைப் பறிக்க முடியாது' என்று அவர் சொல்லிக் கொண்டார். செங்கோல் பறிக்கப்பட்டாலும், செங்கோலை வழிநடத்தும் எழுதுகோலை அவர்தான் வைத்திருந்தார். அரசு என்பது பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக்கொள்ள முடியாமல் போனாலும், அவரிடம்தான் இருந்தது. அரசும் அரசியலும் அவரை இயக்கின. அரசையும், அரசியலையும் அவரே இயக்கினார். இத்தகைய அரசு இயலின், அரசியலின் மாபெரும் தலைவருக்கு இந்த அரசு தனது வரலாற்றுக் கடமையைச் செய்ய நினைக்கிறது.

திருவாரூரில் முத்துவேலர்-அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 ஆம் நாள், அரசு விழாவாக இனி கொண்டாடப்படும் என்பதை இம்மாமன்றத்தில் நெஞ்சில் விம்மக்கூடிய மகிழ்ச்சியால், இதயத்தில் துடிக்கக்கூடிய எழுச்சியால், சிந்தை அணுக்களில் வெளிப்படும் நன்றி உணர்வால் நான் இதை இந்த அவைக்கு அறிவிக்கிறேன். வரும் ஜூன் 3 அன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் கலைமிகு சிலை நிறுவப்படும் என்பதையும் அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.

'நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக உயரம் தாண்ட முடியும்" என்று அடிக்கடிச் சொல்வார் கருணாநிதி. நீண்ட தூரம் இந்த தமிழினத்துக்காக ஓடியவர் அவர். அவரை அதிக அதிக உயரத்தில் உயர்த்திப் பார்ப்பதைத் தனது கடமையாகக் கருதுகிறது தமிழக அரசு" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x