வனப் பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை வெட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட நிதியை பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

வனப் பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை வெட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட நிதியை பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

சென்னை: வனப் பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை வெட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியைப் பயன்படுத்த முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழக வனப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, சென்னை நீதிமன்றத்தில் நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் வளர்ந்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவதற்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியைப் பயன்படுத்த முடியாது என்று மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற மலைவாழ் மக்களைப் பயன்படுத்தலாம் என்றும், அந்நிய மரங்களை அகற்ற தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்தலாமா என்பது குறித்து, மத்திய அரசு பதில்அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று இதே அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில்‘‘தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் காடு வளர்ப்புத் திட்டங்கள் சேர்க்கப்பட்டு இருந்தாலும், வனப் பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான பணிகள் சேர்க்கப்படவில்லை என்பதால், அந்தநிதியைப் பயன்படுத்த முடியாது’’ என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in