பொள்ளாட்சி | சார் ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் தர்ணா போராட்டம்

பொள்ளாட்சி | சார் ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் தர்ணா போராட்டம்
Updated on
1 min read

பொள்ளாச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசிக்கின்றனர்.

கடந்த 2015-ம் ஆண்டு 25 திருநங்கைகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியதாகவும், அதில் இதுவரை மூன்று பேர் மட்டுமே வீடுகள் கட்டியுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக வீடுகளை கட்ட முடியாமல் தவிப்பதாகவும் தெரிவித்தனர். திருநங்கைகளின் வாழ்வாதாரம் மேம்பட, பொள்ளாச்சி பகுதியிலுள்ள திருநங்கைகளுக்கு சுயதொழில் தொடங்க ஆடு, மாடு உள்ளிட்டவை வழங்க வேண்டுமென, சார் ஆட்சியர் தாக்ரே சுபம் ஞானதேவ் ராவிடம் பல முறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அரசின் பல நலத்திட்டங்கள், திருநங்கைகளை வந்தடைய வில்லை எனக் கூறி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர். திருநங்கைகளின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக் கணிக்கப்பட்டால், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in