Published : 25 Apr 2022 01:19 PM
Last Updated : 25 Apr 2022 01:19 PM

தமிழக கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்களுடன் ஆடைகள் அணிய தடை கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்களுடன் ஆடைகள் அணிய தடை விதிக்கக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்து முன்னேற்ற கழக தலைவரும், வழக்கறிஞருமான திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், "பள்ளி மாணவர்களிடம் வேறுபாட்டை களையும் நோக்கில் கடந்த 1960-ம் ஆண்டில் மாணவர்களுக்கான சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுதொடர்பான விதிகளை பல பள்ளிகள் பின்பற்றுவதில்லை. ஹிஜாப் போன்ற மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகளை மாணவ - மாணவிகள் அணிந்து வருகின்றனர். இது சீருடை விதிகளுக்கு எதிரானது. மாணவர்கள் மத்தியில் சமத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும். மதத்தின் பெயரால் சமத்துவமின்மையை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும். கர்நாடகாவில் ஏற்பட்ட ஹிஜாப் பிரச்சினைபோல தமிழகத்தில் ஏற்படாமல் தடுக்கவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாகரிக சமுதாயமான இந்திய சமுதாயத்தில் மதத்தின் பெயரால் பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பதை அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய உடைகள் உள்ளிட்டவற்றை அணிய தடை விதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கல்வி நிறுவனங்களில் ஆடை கட்டுப்பாடுகள் விதிக்க மாநில அரசுக்கு அதிகாரமுள்ளது. குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக மட்டுமல்லாமல் பொதுவாக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக வாதிடப்பட்டது. அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எப்படி இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x