Published : 23 Apr 2022 06:10 AM
Last Updated : 23 Apr 2022 06:10 AM

ஆதார் எண்ணை இணையத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

உதகை: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் தங்களின் ஆதார் எண்ணை பிஎம் கிசான் இணையதளத்தில் பதிவு செய்து வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் விவசாயிகளின் நலன் கருதி பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் சிறு,குறு விவசாயிகள் பிஎம் கிசான் இணையதளத்தில் பதிவு செய்து, ஆதார், வங்கி விவரங்கள், நில விவரங்களை பதிவேற்றம் செய்த பின்பு மூன்று தவணைகளாக ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கை அடிப்படையாக கொண்டு நிதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த ஆண்டுமுதல் பதியப்பட்ட விவசாயிகளின் ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு தவணை நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை பிஎம் கிசான் இணையதளத்தில் பதிவு செய்து, வங்கிக் கணக்குடன் இணைத்து பயன்பெறலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x