Published : 22 Apr 2022 07:25 PM
Last Updated : 22 Apr 2022 07:25 PM

கிராமப்புற சிறுபான்மையின பள்ளி மாணவியருக்கு ஊக்கத் தொகை: தமிழக அரசின் 5 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: மாநில அளவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18-ம் தேதி "சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா" கொண்டாடப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, கிராமப்புற சிறுபான்மையின மாணவியர் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்குதல், சென்னையில் உள்ள கிறித்துவர்களுக்கான அடக்கஸ்தலங்கள் அமைக்க பின்பற்றப்படும் நிபந்தனைகள் தளர்வு செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அறிவித்தார். அவர் வெளியிட்ட 10 முக்கிய அறிவிப்புகள்:

> கிராமப்புற சிறுபான்மையின மாணவியர் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில, 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு 2 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

கிராமப்புறங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவியர் இடைநிற்றல் இன்றி, தொடர்ந்து கல்வி பயில ஊக்கத்தொகையாக 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ரூ. 500-ம் மற்றும் 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு ரூ.1,000-மும் 2 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

> கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் பொருண்மை இத்துறை மூலம் செயல்படுத்தப்படும்.

கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் பொருண்மைக்கென வழிமுறைகள் உருவாக்கப்பட்டு இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும்.

> சென்னையில் உள்ள கிறித்துவர்களுக்கான அடக்கஸ்தலங்கள் அமைக்க பின்பற்றப்படும் நிபந்தனைகள் தளர்வு செய்யப்படும்.

சென்னையில் உள்ள கிறித்துவர்களுக்கான அடக்கஸ்தலங்கள் அமைக்க, புதிய நிலம் கையகப்படுத்தவும், சென்னையில் ஏற்கனவே உள்ள அடக்கஸ்தலங்களில் மீண்டும் அடக்கம் செய்வதற்கு உள்ள நிபந்தனைகளைத் தளர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

> மாநில அளவில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18-ம் தேதி "சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா" 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கொண்டாடப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் "சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா" மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொண்டாடப்பட்டு வருவதைப் போன்று மாநில அளவில் "சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா" கொண்டாட ஆண்டிற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

> உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, அவரின் குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, அவரது குடும்பம் வறுமையில் வாடாமல் இருப்பதற்கு, அக்குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x