Published : 22 Apr 2022 05:07 PM
Last Updated : 22 Apr 2022 05:07 PM

இ-நூலகம் முதல் கல்விச் சுற்றுலா வரை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் 10 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: 275 கல்லூரி விடுதிகளில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் இணைய வழி நூலகம் (E-Library) அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, சொந்த கட்டடம் முற்றிலும் பழுதடைந்ததால் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் 2 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டுதல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள மூன்று கள்ளர் மேல்நிலைப் பள்ளிகளில் உண்டு உறைவிடப் பள்ளிகள் தொடங்குதல், தையல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆயத்த ஆடை அலகுகள், சலவைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நவீன முறை சலவையகங்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவித்தார். அவர் வெளியிட்ட 10 முக்கிய அறிவிப்புகள்:

> 275 கல்லூரி விடுதிகளில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் இணைய வழி நூலகம் (E-Library) அமைக்கப்படும்.

கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மின்நூல்கள் உட்பட இதர மின்நூல்களை இணைய வழியில் படிப்பதற்கு ஏதுவாக ஒரு நூலகத்திற்கு ரூ.80,000 செலவில் 275 கல்லூரி விடுதிகளுக்கு 2 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கணினி மற்றும் இதர உபகரணங்கள் வாங்கி வழங்கப்படும்.

> மாணவ, மாணவியர் குறைவாக உள்ள பள்ளி விடுதிகளை மறுசீரமைத்து, தேவைப்படும் இடங்களில் 15 கல்லூரி விடுதிகள் 1 கோடியே 48 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் துவக்கப்படும்.

மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி விடுதிகளுக்கு பதிலாக அவற்றை மறுசீரமைத்து தேவையுள்ள 15 இடங்களில் 1 கோடியே 48 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் கல்லூரி விடுதிகளாக தொடங்கப்படும்.

> பள்ளி மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் 48 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவில் கல்லூரி மாணவியர் தங்க அனுமதி அளிக்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவியர் கல்லூரிகளில் அதிக அளவில் சேர்ந்து கல்வி பயில வேண்டும் என்பதற்காக, பள்ளி மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் கல்லூரி மாணவியர் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும். இதற்கென 48 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

> சொந்த கட்டடம் முற்றிலும் பழுதடைந்ததால் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் 2 விடுதிகளுக்கு 6 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடம் கட்டித்தரப்படும்.

விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியரின் நலன் கருதி, சொந்த கட்டடம் முற்றிலும் பழுதடைந்ததால் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் 2 விடுதிகளுக்கு 6 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்டித்தரப்படும்.

> மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள மூன்று கள்ளர் மேல்நிலைப் பள்ளிகளில் 1 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் உண்டு உறைவிடப் பள்ளிகள் தொடங்கப்படும்.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரை அனைத்து வகைகளிலும் சிறந்து விளங்கிடச் செய்ய, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள மூன்று கள்ளர் மேல்நிலைப்பள்ளிகளில் உண்டு உறைவிடப் பள்ளிகள் 1 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் துவங்கப்படும்.

> மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 2 கள்ளர் சீரமைப்பு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக 1 கோடியே 34 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் நிலை உயர்த்தப்படும்.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் நலனுக்காக மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 2 கள்ளர் சீரமைப்பு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக 1 கோடியே 34 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் நிலை உயர்த்தப்படும்.

> சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்கள் 10 நபர்களை இணைத்து ஒரு குழு என 25 குழுக்களுக்கு, 25 நவீன முறை சலவையகங்கள் 75 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தித்தரப்படும்.

பொருளாதரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்களை மேம்படுத்துவதற்காக, 10 நபர்களை இணைத்து ஒரு குழு என 25 குழுக்களுக்கு, 25 நவீன முறை சலவையகங்கள் துவங்க தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் இதர செலவுகளுக்கு 75 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

> தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்கள் 10 நபர்களை இணைத்து ஒரு குழு என 25 குழுக்களுக்கு, 25 ஆயத்த ஆடை அலகுகள் (Readymade Garments Units) 75 லட்சம் ரூபாய் செலவில் அமைத்துத்தரப்படும்.

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள ஆறு சரகங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக, தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற (ஆண்/பெண்) 10 நபர்களை இணைத்து ஒரு குழு என 25 குழுக்களுக்கு, 25 ஆயத்த ஆடை அலகுகள் (Readymade Garments Units) துவங்க தேவைப்படும் உபகரணங்கள் 75 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

> 11ஆம் வகுப்பு பயிலும் கள்ளர் சீரமைப்பு பள்ளி மாணவ, மாணவியரை மாநில அளவில் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு 49 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரை மாநில அளவில் முக்கிய இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு 49 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

> விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு ஆண்டுதோறும் 3 முறை இலவச மருத்துவப் பரிசோதனை செய்வதற்கென வழங்கப்பட்டு வரும் இடைநிகழ் செலவினம் ரூ.1,000-லிருந்து, ரூ.3,000 ஆக 32 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்த்தப்படும்.

அனைத்து விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் 3 முறை இலவச மருத்துவப் பரிசோதனை செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்த இடைநிகழ் செலவினமாக விடுதி/கள்ளர் பள்ளி ஒன்றிற்கு 2007-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் தொகையான ரூ.1,000-ஐ, ரூ.3,000 ஆக உயர்த்தப்படும். இதற்கென 32 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x