Published : 22 Apr 2022 07:17 AM
Last Updated : 22 Apr 2022 07:17 AM

இணைய வழி சிறப்பு கலந்துரையாடல்; ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’ - நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணைய வழி சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு வரும் 23-ம் தேதி சனிக்கிழமை (நாளை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது நாளைய இந்தியாவை வளமானதாகவும், அறிவியல் சிந்தனையோடும் வளர்த்தெடுக்க வேண்டும் என்று விரும்பியவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இளைய தலைமுறையினரிடம் உரையாடும் போதெல்லாம் தொடர்ந்து இதை வலியுறுத்தி வந்தவர். கலாமின் மறைவுக்கு பிறகு, அவரது அறிவியல் சிந்தனைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் தொடர்ந்து நடத்தி வருகிறது.

அந்த வகையில், ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணையவழி கலந்துரையாடல் நிகழ்வு நாளை மாலை 6 மணிக்கு நடத்தப்படுகிறது. இதில் தேசிய வடிவமைப்பு, ஆராய்ச்சி மன்ற இயக்குநரும், ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு, டிஆர்டிஓ ஜெனரல் (ஆர்&எம்) முன்னாள் இயக்குநரும், டெல்லி ஐஐடி (சிஓஇ – பாதுகாப்பு) இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் சித்ரா ராஜகோபால் ஆகிய இருவரும் பங்கேற்று கலந்துரையாட உள்ளனர்.

இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் சிறப்பான பங்களிப்பு குறித்தும், அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றிய தங்களது அனுபவங்கள் பற்றியும் இந்த கலந்துரையாடலில் அவர்கள் பகிர்ந்துகொள்ள உள்ளனர். இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடைகளை அனுப்பும் பார்வையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஆர்வம் உள்ள அனைவரும் இதில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00064 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x