Last Updated : 04 May, 2016 09:01 AM

 

Published : 04 May 2016 09:01 AM
Last Updated : 04 May 2016 09:01 AM

உடம்பு எப்படி இருக்கிறது? - வாக்குச் சாவடி அலுவலர்களை சோதனை செய்ய புதியமுறை

தமிழக சட்டப்பேரவைத் தேர் தலை முன்னிட்டு தமிழ்நாடு முழு வதும் வாக்குச்சாவடி அதிகாரி களுக்கு கடந்த மாதம் 24-ம் தேதி பயிற்சி அளிக்கப்பட்டது. அப் போது ஏராளமானோர் உடல் நிலையைக் காரணம் காட்டி தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கக் கோரினர். அவ்வாறு பயிற்சிக்கு வராதவர்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. முதல்கட்ட பயிற்சிக்கு வராதவர்களுக்கு கடந்த 2 நாட்களாக பயிற்சி அளிக் கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பயிற்சியின்போது உடல் நிலை சரியில்லை என்று சொல்லும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மருத்துவர் குழு மூலம் பரிசோதிக்க தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது. இப்புதிய முறை மூலம், உடல்நிலை சரியில்லை என்று சொன்னவர்களின் உடல் பரிசோதிக்கப்பட்டு உண்மை நிலை கண்டறியப்பட்டது.

சென்னை எழும்பூர் (தனி) தொகுதியைப் பொருத்தவரை, தேர்தல் பணி செய்வதற்காக ஆயிரத்து 233 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். முதல்கட்ட பயிற்சி யின்போது 119 பேர் வரவில்லை. இவர்களுக்கு சென்னை சூளை ராட்லர் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, உடல்நலக் குறைவு என்று சொல்லி தேர்தல் பணியை தவிர்க்க முயன்றவர்கள் மருத் துவ பரிசோதனைக்கு உட்படுத் தப்பட்டனர்.

இதுகுறித்து சென்னை எழும்பூர் (தனி) தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி வி.மாலதி கூறும்போது, “உடல்நிலை மோசமாக இருப்ப தால் தங்களால் தேர்தல் பணியில் ஈடுபட முடியாது என்று 7 பேர் தெரிவித்தனர். அவர்களின் உடலை மருத்துவர் குழு முழுமையாகப் பரிசோதித்து அறிக்கை அளித்தது. அதன்படி, மருத்துவ ரீதியான உடல் தகுதி இருந்த 5 பேரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நியாயமான காரணத்துக்காக இருவரின் கோரிக்கை மட்டும் ஏற்கப்பட்டது” என்றார்.

மருத்துவ பரிசோதனைக்காக வந்த அரசு ஊழியர் ஒருவர், தனக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் தன்னை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரினார். இப்படி ஏற்க முடியாத காரணத்தை வேண்டுமென்றே கூறிய அவர் பற்றிய விவரம் உரிய அதிகாரிகள் மூலம் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான சந்திரமோகன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மற்றொரு அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x