Published : 22 Apr 2022 11:39 AM
Last Updated : 22 Apr 2022 11:39 AM

முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம் மீண்டும் அமல்: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம் விதிக்கும் நடைமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ண்ன இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கரோனா தொற்று அதிகரிப்பது தொடர்பாக பதற்றம் அடையத் தேவையில்லை. இதனை மத்திய அரசே கூறியுள்ளது.

சென்னை ஐஐடியில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உடல்நலனில் எந்த பாதிப்பும் இல்லை. ஒருவருக்கு மட்டுமே காய்ச்சல் உள்ளது. அனைவருக்கும் ஆக்சிஜன் நிலைமை சீராக உள்ளது. யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலையில் இல்லை. கரோனா பரவல் சற்றே உயர்வதால், மீண்டும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்கள், வணிக வளாகங்களின் நுழைவு வாயிலில் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து இடங்களிலும் இதைப் பின்பற்ற வேண்டும். இந்த விதிகளை அனைத்து கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகக்கவசம் கட்டாயம் என்ற விதி தளர்த்தப்படவில்லை. அபராதம் மட்டும் விதிக்க வேண்டாம் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள்" என்று தெரிவித்தார்.

சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம்: முன்னதாக இன்று காலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், "வடமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமாக சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு பரவியது உறுதி செய்யபட்டுள்ளது.

எனவே நெடுஞ்சாலை பணிகள் மற்றும் கட்டிடப் பணிகளுக்கு வடமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பணியாட்களை அழைத்து வரும் இடைத்தரகர்கள் உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் பணியாட்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதோர் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கியுள்ளது. இவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் விதமாக மே 8 ஆம் தேதி தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது" என்று கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x