பிற அரசு மருத்துவக் கல்லூரிகளைப் போலவே கட்டணம் வசூலிக்கக் கோரி: சிதம்பரம் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம்

வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள்.
வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள்.
Updated on
1 min read

கடலூர்: பிற மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த அளவு கல்விக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தங்களுக்கு மட்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து சிதம்பரம் ராஜா முத்தையாஅரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்றும் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு பல்கலைக்கழகமாக மாற்றப்பட்ட நிலையில், அதன் கீழ் இயங்கி வரும் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரிக்கு மட்டும் தனியார் மருத்துவக் கல்லூரி போல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அரசு கல்லூரியாக அனைத்து செயல்பாடுகளும் இருக்க, கட்டண விகிதத்தில் ஏன் இந்த குளறுபடி என்று மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, அப்போதைய அதிமுக அரசு 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் 2020-21 பட்ஜெட் தாக்கல் செய்யும்போது ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகப் பெயர் மாற்றம் செய்தது. ஆனாலும், மாணவர்களின் கட்டண விகிதம் மாற்றப்படவில்லை. ஆட்சி மாற்றம் வந்தால் சரி செய்யப்படும் என்று திமுக தரப்பில் மாணவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும், இங்கு ஏற்கெனவே பயின்று வரும் மாணவர்களிடம் அதே பழையமுறைப்படி தனியார் கல்லூரிகளுக்கு இணையான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இங்கு பயிலும் மாணவர்கள் தனியார் மருத்துவக்கல்லூரி கல்வி கட்டணத்தையே கட்ட வேண்டும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. ‘பிற அரசு மருத்துவக்கல்லூரியில் வாங்கப்படும் கல்விக் கட்டணத்தை தான் கட்டுவோம்’ என்று கூறி கடந்த 10-ம் தேதி முதல் இம்மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்நாள் போராட்டமாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கடந்த 11-ம் தேதி முதல்20-ம் தேதி வரை 11 நாட்கள் அண்ணாமலைநகரில் உள்ள மருத்துவக்கல்லூரி வளாகம், மருத்துவக்கல்லூரி புல முதல்வர் அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்று தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ள மருத்துவ மாணவர்கள் தெரிவித்தனர். இப்போராட்டத்தில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற் றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in